பொறியியல் மாணவர் சேர்க்கை: கவுன்சிலிங் அட்டவணை, ரேங்க் பட்டியல் எப்போது?

மிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான (TNEA-2025) விரிவான கலந்தாய்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் (DOTE) தெரிவித்துள்ளது.

உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் DOTE, இந்த ஆண்டும் ஒற்றை சாளர முறையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த கலந்தாய்வு முழுவதும் ஆன்லைனிலேயே நடைபெற உள்ளது. இதில் பதிவு செய்வது, கட்டணம் செலுத்துதல், விருப்ப பாடத் தேர்வு, இட ஒதுக்கீடு மற்றும் உறுதிப்படுத்தல் ஆகியவை அடங்கும்.

புதுப்பிக்கப்படும் TNEA ஆன்லைன் தளம்

இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையையொட்டி, TNEA -வின் ஆன்லைன் தளமான https://www.tneaonline.org/ யைப் புதுப்பிக்கும் பணி தொடங்கிவிட்டது. அதிகாரிகள் தொடர்ந்து புதிய தகவல்களை பதிவேற்றி வருகின்றனர் . “கடந்த ஐந்து ஆண்டுகளின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் இணையதளத்தில் உள்ளன. இது மாணவர்களுக்கு பாடப்பிரிவு தேர்வில் உதவும். ஆனால், 12-ஆம் வகுப்பு முடிவுகள் வெளியான பிறகே கவுன்சலிங் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். மாநில அரசு இதற்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. மேலும், இந்த ஆண்டு, மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடவடிக்கைகள் ஒரு மாத காலம் நீடிக்கும்” என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜூலை இரண்டாவது வாரத்தில் ரேங்க் பட்டியல்

இது தொடர்பாக பேசிய உயர்கல்வித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், “கவுன்சலிங் தேதிகள் 2025 ஆம் கல்வியாண்டுக்கான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (AICTE அட்டவணையை பின்பற்றி அறிவிக்கப்படும். ரேங்க் பட்டியல் ஜூலை இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே மாதத்தில் கவுன்சலிங் தொடங்கி, செப்டம்பருக்குள் முழு செயல்முறையும் முடிவடையும். இந்த அட்டவணை, மாணவர்களுக்கு தெளிவான திட்டமிடலை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் ஒற்றை சாளர முறை மூலம் வெளிப்படையான மற்றும் திறமையான சேர்க்கை நடைபெறும்” என்று தெரிவித்தார்.

மாணவர்களுக்கு உதவ பல வசதிகள்

TNEA ஆன்லைன் தளம், மாணவர்களுக்கு பல்வேறு தகவல்களை எளிதாக அணுக உதவுகிறது. கட்-ஆஃப் மதிப்பெண்கள், கல்லூரிகள், பாடப்பிரிவுகள் மற்றும் சேர்க்கை விதிமுறைகள் பற்றிய விவரங்கள் இதில் உள்ளன. மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்ப, கடந்த ஆண்டுகளின் கட்-ஆஃப் அடிப்படையில் பாடப்பிரிவு மற்றும் கல்லூரியை தேர்ந்தெடுக்கலாம். பொறியியல் படிப்புகளில் அதிக போட்டி நிலவும் சூழலில், இந்த வசதி, மாணவர்கள் தங்களுக்கேற்ற பாடத்தை தேர்வு செய்வதில் தெளிவான விரைவான முடிவெடுக்க உதவும்

தமிழ்நாடு, இந்தியாவின் முன்னணி பொறியியல் கல்வி மையங்களில் ஒன்றாக திகழ்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகள், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குகின்றன. TNEA-வின் ஒற்றை சாளர முறை, சேர்க்கை செயல்முறையை எளிமையாக்கி, அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்கிறது.

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

12-ஆம் வகுப்பு முடிவுகள் பொதுவாக மே மாதத்தில் வெளியாகும் என்பதால், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கவுன்சலிங் அட்டவணை மூலம் மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். TNEA-2025-இன் விரிவான கவுன்சலிங் அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களை அதற்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Crime in cross road. The real housewives of potomac recap for 8/1/2021. El cuarto agua enfrenta una nueva grieta dentro de la casa de los famosos all stars.