Amazing Tamilnadu – Tamil News Updates

இனி வீடு கட்ட அனுமதி பெற அலைய தேவையில்லை… ஆன்லைன் மூலமே உடனடியாக பெறலாம்!

மிழ்நாடு அரசின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், ஒற்றைச்சாளர முறையில், கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பணி எளிமைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

சுயசான்றிதழ் திட்டம் என்பது, பொதுமக்கள் கட்டட அனுமதிக்காக அலுவலகங்களுக்குச் சென்றுவரும் நேரத்தை முழுமையாக தவிர்த்து, அதிகபட்ச வெளிப்படைத் தன்மையுடனும், நடைமுறையில் உள்ள கட்டட விதிகளை எளிமைப்படுத்தியும் மக்கள் கடைப்பிடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சி எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்

இந்த நிலையில் பட்ஜெட்டில் அறிவித்தபடி, தமிழ்நாட்டில் முதல் முறையாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர மக்கள் இணைய தளம் வாயிலாகச் சுயசான்றிதழ் அடிப்படையில், அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையில், 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு உடனடியாக ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதிகளைப் பெறும் புதிய திட்டத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளை வழங்கினார்.

எப்படி செயல்படும்?

தற்போதுள்ள ஒற்றைச் சாளர முறையின் மூலம் ஒப்புதல் பெறுவதைக் காட்டிலும், இந்தச் சுயசான்றிதழ் திட்டத்தில் ஒப்புதல் பெறும் நடைமுறை மிகவும் எளிதான வகையில் இருக்கும் என்பதால், அது பொதுமக்களுக்குப் பெரிதும் பயனளிப்பதாக இருக்கும். இது தொடர்பாக, ஒற்றைச் சாளர முறையில் சுயசான்றிதழ் திட்டத்திற்கான மென்பொருள் தொகுப்பு உருவாக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

தற்போது, குடியிருப்புக் கட்டடங்களுக்கான கட்டட அனுமதி பெறுவதற்காகப் பெறப்படும் மொத்த விண்ணப்பங்களில் 72 விழுக்காடு ஊராட்சிகளிடமிருந்தும், 77 விழுக்காடு பேரூராட்சிகளிடமிருந்தும், 79 விழுக்காடு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிடமிருந்தும் பெறப்படுகிறது.

அவ்விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் ஒற்றைச் சாளர முறையில் பரிசீலனை செய்யப்படுகின்றன.பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இப்புதிய திட்டத்தின் கீழ் அனுமதி பெறும் கட்டடங்களுக்கும் சாலைக்கும் இடையில், தளர்வு (1.5 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது), கூராய்வுக்கட்டணம் (scrutiny fee) (சதுர மீட்டருக்கு ரூ.2), உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கான (I & A) கட்டணங்கள் (சதுர மீட்டருக்கு ரூ.375) ஆகியவற்றில் விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் தேவையான கட்டணங்களைச் செலுத்தியபின் விரைவுத் துலங்கல் (QR) குறியீட்டுடன் கட்டட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், முன் இடக்கள ஆய்வு மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, உடனடியாகக் கட்டுமானப் பணி மேற்கொள்வதற்கும் வழிவகை செய்து கட்டட முடிவுச் சான்று பெறுவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இத்திட்டத்தின் படி,‘www.onlineppa.tn.gov.in http://www.onlineppa.tn.gov.in/’ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் உடனடியாக அனுமதி வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்துக்கும் செல்ல வேண்டியதில்லை. கட்டடப்பணிகள் முடிந்ததும், முடிவுச்சான்று பெறுவதில் இருந்தும் விலக்களிக்கப்படுகிறது.

பரிசீலனைக் கட்டணம், கட்டமைப்பு, வசதிக்கட்டணங்களில் இருந்து 100 சதவீதம் விலக்களிக்கப்படுகிறது.

Exit mobile version