தமிழக சட்டசபையில் இன்று 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அவர் தனது பட்ஜெட் உரையில், தொழில்துறை தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள் இங்கே…
” இந்தியாவிலேயே, அதிக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமையப்பெற்ற மாநிலங்களில், லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுகளுடன் தமிழ்நாடு 3 ஆவது இடத்தில் உள்ளது. எதிர்வரும் 2025-26 ஆம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் 10 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 25 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.1,918 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள குறு, சிறுமற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில், இந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம், விழுப்புரம் மாவட்டம் சாரம் மற்றும் நாயனுர், கரூர் மாவட்டம் நாகம்பள்ளி, திருச்சி மாவட்டம் -சூரியூர், மதுரை மாவட்டம் கருத்தபுளியம்பட்டி, இராமநாதபுரம் மாவட்டம் தனிச்சியம், தஞ்சாவூர் மாவட்டம் நடுவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம்-நரசிங்கநல்லூர் ஆகிய 9 இடங்களில் மொத்தம் 398 ஏக்கர் பரப்பளவில் ரூ. 366 கோடி மொத்த திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டைகள் (SIDCO) உருவாக்கப்படும். இதன் மூலம் சுமார் 17,500 நபர்கள் வேலை வாய்ப்பினைப் பெறுவர்.
250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 5,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

ரூ.250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 20,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
ரூ.50 கோடியில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030 ல் செயல்படுத்தப்படும்” என்பது உள்ளிட்ட மேலும் அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
தேனி மாவட்ட நறுமணப் பொருட்கள், நாமக்கல் முட்டை உணவு சார்ந்த பொருட்கள், பரமக்குடியில் மின் கடத்தி உபகரணங்கள், தஞ்சாவூர் கைவினைப் பொருட்கள், சென்னையில் பொறியியல் உற்பத்தி பொருட்களுக்கு ரூ.50 கோடியில் பொது வசதி மையங்கள் உருவாக்கப்படும்.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு ரூ.170 கோடி நிதி ஒதுக்கீடு.
கலைஞர் கைவினைத் திட்டத்தில் 19 கைவினைஞர்களுக்கு உதவிடும் வகையில் மானிய நிதியாக ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித் திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விண்வெளித் தொழில்நுட்ப நிதியாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
40,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் ” என்றும் அவர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.