Amazing Tamilnadu – Tamil News Updates

திண்டிவனத்தில் உருவாகும் ‘டாபர்’ உணவு பதப்படுத்தும் ஆலை… 250 பேர்களுக்கு வேலைவாய்ப்பு!

ந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

அந்த இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக்கூடிய உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களையும் (capital intensive high-tech Industries), பெருமளவிலான வேலைவாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் (Employment intensive Industries) ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, வீட்டு பராமரிப்பு (home care), தனிப்பட்ட பராமரிப்பு (personal care) மற்றும் பழச்சாறுப் பொருட்கள் (juice products) போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வரும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனமானது, தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக, தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றைய தினம் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

250 பேர்களுக்கு நேரடி, 1000 கணக்கானோருக்கு மறைமுக வேலைவாய்ப்பு

இந்த ஆலை நிறுவப்படுவதன் மூலம், 250 பேர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கக்கப்பட்டுள்ள போதிலும் , மறைமுகமாக ஆயிரக்கணக்கானோருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்டா விவசாயிகளுக்கு விற்பனை வாய்ப்பு

மேலும் மிக முக்கியமாக, அருகிலுள்ள டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பதப்படுத்தப்பட்ட வேளாண் விளைபொருட்களை இங்கு விற்க புதிய வாய்ப்புகள் உருவாகும் என தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் டாபர் இந்தியா லிமிடெட் தலைமை செயல் அதிகாரி மோஹித் மல்ஹோத்ரா இது குறித்து கூறுகையில், “இந்த முதலீடு தென்னிந்தியாவில் எங்களது தயாரிப்புகளுக்கான அதிகரித்து வரும் தேவைக்கு சிறப்பாக சேவை செய்யவும், இந்த பிராந்தியத்தில் எங்களது சந்தை இருப்பை வலுப்படுத்தவும் உதவும். வேலை வாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர் கூட்டாளிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க நாங்கள் காத்திருக்கிறோம்.

‘சிப்காட்’ இல் உள்ள எங்கள் ஆலையில் உள்ள நவீன வசதிகள் சமீபத்திய தொழில்நுட்பத்துக்கு ஏற்றவகையில், நாங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து பொருட்களின் தரத்தையும் உயர்த்தும் வகையில் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version