தமிழ்நாட்டில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாநில அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
2020-ல் புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள், இது மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சியாகவும், மொழி மற்றும் கலாசார அடையாளங்களை பாதிக்கும் முயற்சியாகவும் கருதி எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாடு, தனது இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தி, மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது.
2021-ல், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு காலதாமதம் செய்தது. இதனால் தமிழ்நாட்டில் கல்வி உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டன. 2022-ல், மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு பலமுறை எதிர்ப்பு குரல் எழுப்பியது. மாநிலத்தின் கல்வி முறையை மத்திய அரசு கட்டுப்படுத்த முயல்வது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதே து தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாக உள்ளது.
தமிழக அரசு வழக்கு
இந்த நிலையில், மத்திய அரசு இன்னமும் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதியான ரூ.2,291 கோடியை விடுவிக்காததை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “தமிழ்நாடு அரசின் கல்வி திட்டம் ஏற்கனவே சிறப்பான முறையில் உள்ளது. இரு மொழி கொள்கையை தமிழ்நாடு பின்பற்றி வருகிறது. தமிழ் தாய்மொழி அல்லாத மாணவர்களுக்கு மற்ற மொழிகளில் படிக்க போதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2010 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் மூலம் மாநிலம் முழுவதும் சமமான பாடத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டின் கல்வித்தரம் சிறப்பாக உயர்ந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு சட்டப்படி ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய கல்வி திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த தேவை இல்லை.
மத்திய அரசு தனது கல்வி கொள்கையை திணிக்க நிதி விவகாரத்தை பயன்படுத்த கூடாது. இது போன்ற கல்வி திணிப்பு என்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது. அரசியல் சாசனம் வழங்கி உள்ள உரிமையின் படி மாநில அரசு சொந்த கல்வி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தடையாக இருப்பது அரசியல் அமைப்புக்கு எதிரானது.
‘43.94 லட்சம் மாணவர்கள் பாதிப்பு’
மத்திய அரசு கல்வி நிதி வழங்காததால் 43.94 லட்சம் மாணவர்கள், 2.21 லட்சம் ஆசிரியர்கள், 32,701 இதர பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பிப்ரவரி மாதம் முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதற்கு ஒன்றிய அரசு அளித்த பதில் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஒன்றிய அரசு வழங்க வேண்டிய 2151.59 கோடி கல்வி நிதியும், அதற்கான ஆறு சதவீத வட்டி 139.70 கோடியும் சேர்த்து 2291 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.