Amazing Tamilnadu – Tamil News Updates

‘வேர்களைத் தேடி’ தமிழகம் வந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள்!

ண்டைய தமிழர்களின் கட்டிடம், சிற்பக்கலை, நீர்மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு,தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் என்றகலாச்சார பரிமாற்றம் மேற்கொள்ளும் சுற்றுலாத் திட்டமான ‘வேர்களைத் தேடி’ என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை, கடந்தாண்டு மே 24 ஆம் தேதி, சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இத்திட்டத்தின்படி, அயல்நாடுகளில் வாழும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழகம் வரவழைக்கப்படுவார்கள். அவர்கள் தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, தமிழகஅரசு சார்பில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அதன் அடிப்படையில், சென்ற ஆண்டு இந்த பண்பாட்டுப் பயணத் திட்டத்தில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் மூலம் 4 நாடுகளைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களைக் கொண்ட முதற்கட்ட பயணம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழகம் வந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள்

அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் 2 ஆம் கட்ட பயணமாக, தென்ஆப்ரிக்கா, உகாண்டா, குவாடலூப், மார்டினிக், பிஜி, இந்தோனேஷியா, மொரிஷியஸ், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, கனடா, மியான்மர், மலேசியா, இலங்கை, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 15 நாடுகளைச் சேர்ந்த100 அயலகத் தமிழ் இளைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆகஸ்ட் 1 முதல் 15 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

அவர்களுக்கு துணிகள், பயணக்குறிப்புகள், புத்தகங்கள், அடையாள அட்டைகள் உள்ளிட்ட பயணத்திற்கான பொருட்களை வழங்கி இப்பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இப்பயணத்தில் பங்குபெறும் அயலகத் தமிழ் இளைஞர்கள், தமிழகத்தின் கலாச்சார தூதுவர்களாகச் செயல்பட்டு தமிழர்களின் கலாச்சார பெருமைகளை அவர்களது நாடுகளில் பரப்புவர்.

முதலமைச்சர் வாழ்த்து

இந்த அயலகத் தமிழ் இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அயலகங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்ட தமிழ் உறவுகளுக்கு நமது மண்ணின் பண்பாட்டையும் நமது நேசத்தையும் அறிமுகம் செய்யத் தொடங்கப்பட்ட வேர்களைத்_தேடி திட்டத்தின் இரண்டாம் ஆண்டில் வருகை தந்துள்ள 15 நாடுகளைச் சேர்ந்த 100 இளைஞர்களின் தமிழ்நாட்டுப் பயணம் இனிதாகவும் – அறிவார்ந்த அனுபவமாகவும் அமையட்டும்” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version