இலங்கை செல்லும் பிரதமர்… கச்சத்தீவு மீட்பு, மீனவர்கள் விடுதலைக்கு நடவடிக்கை கோரும் முதல்வர்!

பாக் வளைகுடா பகுதியில் வாழும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லார். இதை கருத்தில் கொண்டு, கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், அந்நாட்டு சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், 1974 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தம் (கச்சத்தீவு ஒப்பந்தம்) தான் நீடிக்கும் இப்பிரச்சனைக்கு அடிப்படையாக உள்ளது என்பதை தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாடு அரசு உறுதியுடன் எதிர்த்து வந்துள்ளதையும், 1974-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்போது கடுமையாக எதிர்த்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், 28.06.1974 அன்று ஒன்றிய அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தில் மாநில அரசின் இசைவின்றி கையெழுத்திட்ட பிறகு, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக மறுநாளே 29.06.1974 அன்று தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய தினமே அப்போதைய இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதையும் தனது கடிதத்தில் கோடிட்டு காட்டியுள்ளார்.

நமது மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதாலும், அவர்களது படகுகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்படுவதாலும், கடலோர மீனவ சமுதாயத்தினரின் வாழ்க்கை மிகுந்த கவலையிலும், துயரத்திலும் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளால் மீனவர்களின் வாழ்வாதாரமும் நிலையற்றதாக மாறியுள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவது குறித்து 2021 ஆம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் பிரதமருக்கும் பலமுறை கடிதங்களை எழுதியுள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இத்தகைய தீவிர நடவடிக்கைகள் நமது மீனவர்களை வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளியுள்ளதால், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Integrative counselling with john graham. Two dеаthѕ shaped my bеlіеf іn thе rіght tо dіе. Аренда парусной яхты jeanneau 39i в Гёчеке.