பேருந்துகள் அரசுடமை முதல் மெட்ரோ ரயில் வரை… தமிழகத்தின் வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்ட கலைஞரின் திட்டங்கள்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்த கலைஞர் மு. கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினம் இன்று. தமிழகத்தை செதுக்கிய சிற்பி என வர்ணிக்கப்பட்ட கலைஞர் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள், தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டன என்றால், அதில் மிகையில்லை.

அப்படி, அவரது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட சில முக்கியமான திட்டங்கள் இங்கே…

பேருந்துகள் அரசுடமை

அரசுப் பேருந்து நிறுவனங்கள் தொடங்கியது கலைஞர் ஆட்சியின் முக்கிய சாதனை. அதற்கு முன்னர் தனியார் வசம் இருந்த பேருந்து தடங்கள் அரசுடமை ஆக்கப்பட்டன. புதிய நெடுஞ்சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள் உருவாக்கப்பட்டன. பல்லவன், திருவள்ளுவர், சேரன் உள்ளிட்ட போக்குவரத்துக் கழகங்கள் உண்டாகின.

பட்டப்படிப்பு வரை பயணம் இலவசம்

1968 ல், முதலாமாண்டு மட்டுமிருந்த இலவச கல்வி, கலைஞர் முதல்வரான பின் முழுப் பட்டபடிப்புக்கும் இலவசமாக்கப்பட்டது. போக்குவரத்து வசதியின்றி இடைநிற்றல் கூடாதென்பதற்காக மாணவர்களுக்கு இலவச பயணச் சலுகை வழங்கி, 2010 ல் அரசு கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பையும் இலவசமாக்கியது திமுக. நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் பல புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

கை ரிக்சா ஒழிப்பு

ஆண்டைகளை அடிமைகள் பல்லக்கில் சுமந்து செல்வது போல், மனிதனை மனிதன் வாகனத்தில் உட்கார வைத்து இழுத்துச் செல்லும் கை ரிக்சாக்களை கலைஞர் ஒழித்து, அதற்கு மாற்றாகச் சைக்கிள் ரிக்சாக்களை அறிமுகப்படுத்தினார்.

குடிசைகள் இல்லாத தமிழகம்

இந்தியாவிலேயே முதன் முறையாகக் கலைஞரின் ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. குடிசை வாழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் குடிநீர், வடிகால் அமைப்புகள், மின்வசதி போன்ற உள்கட்டமைப்புடன் அடுக்குமாடிக் குடியிருப்புகள் உருவாக்கித் தரப்பட்டன.

நில உச்சவரம்பு

நில சீர்திருத்தச் சட்டத்தை முன்மொழிந்து, நில உச்சவரம்பு ஒரு நபருக்கு 30 ஏக்கர் என்றிருந்ததை 15 ஏக்கர் எனக் குறைத்தார் கலைஞர். இது நில உரிமை வேறுபாடுகளை குறைத்தது. பலரை நில உரிமையாளராகவும் மாற்றியது.

தமிழகம் மின்மயம்

கலைஞரின் மின் திட்டம் நகர்ப்புற வீடுகளை இணைக்கவும், கிராமங்களில் `ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு’ திட்டத்தில் மின்சாரம் வழங்கவும் செயல்படுத்தப்பட்டன. மலைக் குக்கிராமங்களில் கூட, ஒவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

பெண்களுக்கு சொத்துரிமை

தமிழ்நாடு பெண்கள் சொத்துரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்ததன் விளைவாக பெண்களுக்கு சம சொத்துரிமையை உறுதி செய்தார் கலைஞர். இந்த வரலாற்று சிறப்புமிக்க சட்டம் பாலின பாகுபாட்டுக்கு முடிவு கட்டும் விதமாக அமைந்தது. இது பாலின சமத்துவத்தை உறுதிபடுத்தும் முன்னோடி நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

கலை, அறிவியல் கல்லூரிகள் அதிகரிப்பு

1967-ல் தமிழகத்தில் இருந்த 109 கலை அறிவியல் கல்லூரிகளில் இரண்டு மட்டுமே அரசு கல்லூரிகள். 1,31,093 மாணவர்கள் படித்தனர். கலைஞர் ஆட்சியில் (1969-1976) 68 கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 2010 -ல் 587 ஆக வளர்ந்தது. இதில் 62 அரசு கல்லூரிகள், 9 பல்கலைக்கழகக் கல்லூரிகள், 133 அரசு உதவி கல்லூரிகள், 383 சுயநிதிக் கல்லூரிகள். மாணவர்கள் – 7,09,162 .

டைடல் பார்க்

சென்னையில் டைடல் பூங்காவை கலைஞர் 2000 ஆம் ஆண்டு நிறுவினார். ஐபிஎம், இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் போன்ற தொழில்துறை ஜாம்பவான்களை ஈர்த்தது. இது, ஒரு முக்கிய தகவல் தொழில்நுட்ப இடமாக சென்னை உருவாவதற்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் பங்களித்தது.

மருத்துவக் கல்லூரிகள்

1966ல் தமிழ்நாட்டிலிருந்த 9 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று தனியார் கல்லூரி. மாவட்டங்கள் தோறும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவேண்டுமென்ற திமுகவின் நோக்கத்தின் பலனாக, 2010ல் எம்.பி.பி.எஸ் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவக் கல்லூரிகள் 17 ஆகவும், பி.டி.எஸ் மற்றும் செவிலியர் போன்ற இதர மருத்துவப் படிப்புக் கல்லூரிகள் 33 ஆகவும் அதிகரித்தன.

சுயஉதவிக் குழுக்கள் அமைப்பு

27,294 விவசாயிகள் சுயஉதவி குழுக்களை உருவாக்கி, அவர்களுக்கு ரூ. 27.29 கோடி சுழல் நிதியை கலைஞர் கருணாநிதி வழங்கினார். மேலும் ரூ. 32,940 சுய குழுக்களுக்கு ரூ.402.56 கோடி நிதி வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை ஒத்துழைப்பு, தொழில்முனைவு மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கு வித்திட்டது.

1,046 பெரிய பாலங்கள் 3,800 சிறிய பாலங்கள்

1,046 பாலங்கள் மற்றும் 3,800 சிறு பாலங்கள் கட்டும் பணிகளை கலைஞர் மேற்பார்வையிட்டார். இந்த உள்கட்டமைப்பு திட்டங்கள், இணைப்பை மேம்படுத்துவதிலும், போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்துவதிலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகித்தன. மொத்தம் ரூ. 881 கோடி, இந்த முயற்சிகள் மாநிலத்தின் சாலை வலையமைப்பை கணிசமாக வலுப்படுத்தியது.

கலப்புமணத் திட்டம்

அஞ்சுகம் அம்மையார் கலப்புமணத் திட்டத்தை அறிவித்தார். இது பிறமணமுறையை அதிகரித்தது. கலப்பு மணம் செய்பவர்களுக்கு முதலில் ரூபாய் ஐயாயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு இத் தொகையை பத்தாயிரமாக உயர்த்தினார். பிறகு 1997 இல் இத்தொகையை 20,000 ஆக்கினார்.

உழவர் சந்தை

விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இடையே பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் உழவர் சந்தைகளைக் கலைஞர் அறிமுகப்படுத்தினார். இடைத்தரகர்கள் இல்லாமல் மலிவு விலையில் காய்கறிகளை வழங்க மதுரையில் நவம்பர் 14, 1999ல் முதல் சந்தை திறக்கப்பட்டது. இந்த முயற்சி பிரபலமடைந்து, நவம்பர் 14, 2000ல் 100வது சந்தை சென்னை பல்லாவரத்தில் திறக்கப்பட்டது.

பெண்களுக்கு இலவச பட்டப்படிப்புத் திட்டம்

ஈ.வெ.ரா – நாகம்மையார் நினைவு மகளிர் இலவச பட்டப்படிப்புத் திட்டம் தமிழ்நாட்டில் பெண்கள் கல்விக்குப் பெரிய உதவியாக இருந்தது. உயர்கல்வி கிடைப்பதற்கு வழிவகை செய்தார் கலைஞர். இந்த மாற்று முன்முயற்சியானது, பாலின சமத்துவத்தை ஏற்படுத்தி பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு அதிகாரம் அளித்து, தேசிய அளவில் ஏற்கப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்து

மனோன்மணியம் பெ.சுந்தரனார் எழுதிய “நீராருங் கடலுடுத்த’ என்ற தமிழ் வாழ்த்துப் பாடலை அரசு மற்றும் கல்வி நிகழ்வுகளில் பயன்படுத்த ஆணை பிறப்பித்தார் கலைஞர். தமிழ்மொழியின் மேன்மையை போற்றும் வகையில் இன்றளவும் இந்தப் பாடல் தமிழ்நாட்டில் விழாக்களில் பாடப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் 33%

கலைஞர் 1996 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்தி முன்னோடியாக விளங்கினார். அவரது அரசாங்கம் பெண் ஆளுமைகளுக்கு பயிற்சி மற்றும் உதவிகளையும் வழங்கியது. இந்த இடஒதுக்கீடு கொள்கை மற்ற மாநிலங்களுக்கு உத்வேகம் அளித்து, பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பெரியார் சமத்துவபுரம்

1997 -ல் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தை கலைஞர் தொடங்கினார். இது பெரியாரின் சமூக நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளை மதிப்பதை நோக்கமாகக் கொண்டது. பெரியாரின் கொள்கைகளை ஊக்குவித்து, தமிழ்நாட்டில் சமூக நீதியை முன்னெடுத்தது.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை எழுப்ப முன்மொழிந்து 2000 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. 133-அடி உயரமான தலைசிறந்த படைப்பானது புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. நற்பண்புகளைக் குறிக்கும் திருக்குறள் வாசகங்கள் அடங்கிய 38 அடி பீடத்தில் சிலை உள்ளது. தமிழர் பெருமையின் அடையாளமாக கலைஞர் கற்பனை செய்த சிலை, இன்று ஒரு சிறந்த சின்னமாகத் திகழ்கிறது.

சிற்றுந்து திட்டம்

தமிழ்நாட்டில் புறநகர் பகுதிகளில் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக சிற்றுந்து திட்டத்தை கலைஞர் செயல்படுத்தினார். 1990 களில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவடைந்து, கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துகிறது. குறைந்த கட்டண போக்குவரத்து வசதியை வழங்கி, தனியார் வாகனங்களை நம்பியிருப்பதை குறைத்தது.

இலவச பஸ் பாஸ்

தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டையை கலைஞர் அறிமுகப்படுத்தினார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்குப் போக்குவரத்து கட்டணத்தை நீக்கி அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. கலைஞரின் முயற்சிகள் மாநிலத்தில் எண்ணற்ற மாணவர்களிடையே நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

நுழைவுத்தேர்வு ரத்து

தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை கலைஞர் ரத்து செய்தார். சமமான வாய்ப்புகளை வழங்கும் வகையில் மாணவர் சேர்க்கையை எளிமைப்படுத்தினார். இதன்மூலம் பலரும் பயனடைந்தனர். விருப்பப்பட்ட மாணவர்கள் தொழிற்பயிற்சி பெற்றனர்.

மெட்ரோ ரயில் திட்டம்

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு வங்கியின் ஆதரவுடன் “மெட்ரோ ரயில் திட்டத்தை” கலைஞர் தொடங்க வழி வகுத்தார். ரூ 14,600 கோடி செலவில், தமிழகத்தில் நவீன மெட்ரோ நெட்வொர்க்கை உருவாக்குவது, இணைப்பை மேம்படுத்துவது மற்றும் போக்குவரத்தை எளிதாக்குவது. மாநில வளர்ச்சிக்கான ஒரு சிறந்த நடவடிக்கையாகும்.

மேலும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சத்துணவில் முட்டை, பெண்களுக்கு சிறு தொழில் கடன், வரும் முன் காப்போம், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, பெண் தொழில் முனைவோருக்கு உதவி, அண்ணா நூற்றாண்டு நூலகம், செம்மொழிப் பூங்கா… என ஏராளமான திட்டங்கள், அவரது ஆட்சிக் காலத்தின் சாதனை பட்டியல்களில் இடம்பிடித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Revengeful sleep procrastination : the dark side of late night vengeance zimtoday daily news. Advantages of local domestic helper. Copyright © 2020 leroy agency press + direct news today + 1 news today broadcasting + erika leroy de saxe.