Amazing Tamilnadu – Tamil News Updates

JEE முதன்மைத் தேர்வில் முதலிடம்… தமிழக மாணவருக்கு குவியும் பாராட்டு!

ஜேஇஇ ( JEE ) முதன்மை தேர்வில், அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்று, தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார் பாளையங்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவரான முகுந்த் பிரதீஷ்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, என்.ஐ.டி, உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர, ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வு முகாமை (National Testing Agency) நடத்தும் இந்த தேர்வானது, Main (முதல்நிலை) மற்றும் Advance (முதன்மை தேர்வு) என இரண்டு கட்டங்களாக நடைபெறும். இந்த நிலையில், நடப்பு 2024 ஆம் ஆண்டிற்கான ஜே.இ.இ தேர்வு, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

இதில் 11 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார். அவர்களில் 70,048 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்த மாணவர் முகுந்த் பிரதீஷ், 300/300 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்தியத் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். முதலிடம் பெற்ற 23 மாணவர்கள் பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முகுந்த் பிரதீஷும் இடம்பெற்று, மாநிலத்துக்குப் பெருமை தேடித்தந்துள்ளார்.

இவரது தந்தை ஸ்ரீகாந்த் தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தில் பொறியாளராகவும், அம்மா தபால் துறையில் உதவியாளராக இருந்து விருப்ப பணி ஓய்வு பெற்றுள்ளார். முகுந்த் பிரதீஷ், பாளையங்கோட்டை உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றின் மாணவர் ஆவார்.

இது குறித்து முகுந்த் பிரதீஷ் கூறுகையில், “ஜே.இ.இ தேர்வில் முதல் இடம் பிடிப்பவர்கள் எப்படி இதனைச் சாத்தியப்படுத்துகிறார்கள் எனப் பல நேரங்களில் நான் யோசித்து இருக்கிறோன். ஆனால், அந்த இடம் தற்போது தனக்குக் கிடைத்துள்ளது. இந்த சந்தோஷத்தை நான் எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை.செமி கண்டக்டர் (semi conductor) பொறியாளராகப் படிக்க ஆசைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜே.இ.இ தேர்வில் முதலிடம் பிடித்த முகுந்த் பிரதீஷுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X வலைதள பக்கத்தில், “11 லட்சம் மாணவர்கள் எழுதிய இத்தேர்வில், அகில இந்திய தரவரிசையில் (300/300) முதல் இடம் பெற்ற 23 மாணவர்களுள் ஒருவராகச் சாதனைப் புரிந்துள்ள மாணவர் முகுந்த் பிரதீஷ் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக விளங்கிய பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

மாணவர் முகுந்த் பிரதீஷுக்கு, மேலும் பலர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். நாமும் பாராட்டுவோம்!

Exit mobile version