Amazing Tamilnadu – Tamil News Updates

விழுப்புரத்தில் திறக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் ‘மினி டைடல் பூங்கா’… வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேம்படும்!

மிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள் என்று அழைக்கப்படும் ‘டைடல் பூங்கா’க்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களை தொடர்ந்து, மாநிலங்களின் பிற நகரங்களிலும் ‘டைடல் பூங்கா’க்களை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, தமிழகத்திலுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் ‘மினி டைடல் பூங்கா’க்கள் (Neo Tidel Parks) அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனைச் செயல்படுத்தும் வகையில், திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் முறையே ரூ.41.90 கோடி மற்றும் ரூ.35 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதனையடுத்து, அதற்கான பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில், அதனைத் தொடர்ந்து, இக்கட்டடத்தின் முதலாவது இடஒதுக்கீடு ஆணையை SUV Startup Space நிறுவனத்தைச் சேர்ந்த எஸ். யுவராஜ் என்பவரிடம் வழங்கினார். இதுதான் தமிழ்நாட்டின் முதல் ‘மினி டைடல் பூங்கா’ ஆகும்.

வசதிகள் என்னென்ன?

குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு, மின்தூக்கிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு, கட்டட மேலாண்மை, மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை, 24×7 பாதுகாப்பு, உணவகம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி

இந்த டைடல் பூங்காவில், சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் ஒரே நேரத்தில் பணிபுரியம் முடியும். இத்திட்டத்தினால், விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன், மாவட்டத்தின் சமூக பொருளாதாரமும் மேம்படும் எனத் தமிழ்நாடு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டை மேம்பட்ட உற்பத்தி மையமாக (Advanced Manufacturing Hub) உருவாக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கான பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மேலும், நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு (Industry 4.0) தமிழகத்தின் மாணவர்களையும், தொழிலாளர்களையும் தொழிலகங்களையும் தயார்படுத்திக் கொள்வதற்கு தொலைநோக்கு பார்வையுடன் “நான் முதல்வன்” திட்டம், “அறிவுசார் நகரம்” (Knowledge City) மற்றும் ஆராய்ச்சி பூங்காக்கள் (Research Parks) அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாகவே, தமிழ்நாடு அரசின் தொழில் துறை சார்பில் சென்னையைப் போன்றே தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் மிபல டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன். விரைவிலேயே பணிகள் நடைபெற்று வரும் திருப்பூர் மினி டைடல் பூங்காவும் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, இதுபோன்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் ‘மினி டைடல் பூங்கா’க்கள் அமைப்பதால், அந்த நகரங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சென்னை மற்றும் பிற நகரங்களுக்குச் செல்வது குறையும். கூடவே அந்த நகரங்களும் பொருளாதார வளர்ச்சி, உட்கட்டமைப்பு வளர்ச்சி உள்ளிட்டவற்றைப் பெறும் சூழல் உருவாகும்.

Exit mobile version