Amazing Tamilnadu – Tamil News Updates

மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் 6,115 புத்தொழில் நிறுவனங்கள் தொடக்கம்!

டந்த 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதியன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவியேற்றது. அப்போது முதல் தொழில்துறையில் தமிழகத்தை வளர்ச்சியடைய செய்ய முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

மேலும், தமிழகத்தை, வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் ( ஒரு லட்சம் கோடி) அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கையும் நிர்ணயித்தார் அவர். அதன் அடிப்படையில், தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளின் ஒரு அம்சமாக சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். மேலும், முதலீட்டை திரட்டுவதற்காக வெளிநாடுகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அரசின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள்

இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. இன்னொரு பக்கம், தமிழ்நாட்டில் Startups எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான உகந்த சூழலை உருவாக்குவதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றபோது, மாநிலத்தில் 2,105 புத்தொழில் நிறுவனங்கள் இருந்தன. இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக புத்தொழில் நிறுவனங்களுக்கு அரசு அளித்து வரும் மிகப்பெரிய ஊக்கம் காரணமாகவே 2021-க்குப் பிறகு 6,115 புத்தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

கோவையில் புத்தொழில் திருவிழா

தமிழக அரசின் சார்பில் புத்தாக்கத் தொழில் வளர்ச்சிக்காக கோவையில் 2023 ஆகஸ்ட் மாதம் நடத்திய ‘தமிழக புத்தொழில் திருவிழா 2023’ மாபெரும் வெற்றி கண்டது. 18,835 பார்வையாளர்கள், 1,761 பிரதிநிதிகளும், 841 கண்காட்சி அமைப்பாளர்கள் இத்திருவிழாவில் பங்கேற்றனர். 83 உற்பத்திப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 67 புத்தொழில் நிறுவனங்கள் மூலம் 6,251 பொருட்கள் தயாரிக்கும் திட்டங்கள் முன்மொழியப்பட்டன.

அவற்றில், ரூ.3 கோடியே 64 லட்சத்து 39,000 மதிப்பீட்டில் 1,674 தொழில்களைத் தொடங்கிட தொழில் முகவர்கள் முன்வந்தனர். 18 மகளிர் சுய உதவிக் குழுக்கள் புத்தாக்கத் தொழில் கூடங்களாக மாறியுள்ளன. 25 மகளிர் தொழில் முகவர்கள் புத்தாக்கத் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் துறை நிதியுதவியால் 150 வேலைவாய்ப்புகளும், டான்சீட் நிதியுதவியில் 1,525 வேலைவாய்ப்புகளும், வேறுபல 238 வேலைவாய்ப்புகளும் என ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் புதிதாக தொடங்கப்பட்ட புத்தாக்கத் தொழில்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

டான்சீட் நிதியுதவி

டான்சீட் நிதியுதவியில் தொடங்கப்பட்ட புத்தாக்கத் தொழில்களில் ரூ.314.30 கோடி முதலீடுகள் உயர்ந்துள்ளன. தமிழ்நாடு நிதித் தளம் மூலமாக 714 முதலீட்டாளர்களுடன் இணைந்துள்ள புத்தாக்கத் தொழில்களின் நிதி ரூ.26 கோடியே 40 லட்சமாக உயந்துள்ளது.

புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகள் அளித்திட 5,393 பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூர், ஓசூர் சிப்காட் தொழிற் பூங்காக்களில் புத்தாக்க மையங்கள் ரூ.33.46 கோடியில் நிறுவப்பட்டு, புத்தாக்கத் தொழில் வளர்ச்சிக்கு அரசு பெரிதும் ஊக்கம் அளித்துள்ளது.

அரசைப் பாராட்டும் தொழில்துறையினர்

மேலும், புத்தாக்கத் தொழில் வளர்ச்சிக்கான 5 ஊக்க மையங்களுக்கு, சிங்கப்பூரிலுள்ள ஸ்விட்ச் தொழில்நிறுவனத்துக்கு சென்று அதன் செயல்பாடுகளை அறிந்து பயன்பெறும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இப்படிப் பல்வேறு முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டுவருவதன் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, புத்தாக்கத் தொழில்கள் வளர்ச்சியில் மாபெரும் சாதனைகளைப் படைத்துள்ளதாக தொழில்துறையினர் வட்டாரத்தில் பாராட்டப்படுகிறது.

Exit mobile version