சிலிண்டர் விலை குறைப்பு: “தேர்தலுக்கு மட்டும் சுரக்கும் மோடியின் கருணை! ” – போட்டுத் தாக்கும் மு.க. ஸ்டாலின்!

மிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோயிலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார், விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

கூட்டத்தில் பேசிய அவர், பத்தாண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசு நாட்டையே படுகுழியில் தள்ளிவிட்டதாகவும், நாட்டை உடனடியாக மீட்பதற்கான மிகப்பெரிய வாய்ப்புதான் இந்தத் தேர்தல் என்றும் கூறினார்.

தேர்தல் நேரத்தில் சிலிண்டர் விலை குறைப்பு

தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், “தேர்தல் வந்துவிட்டால், கூடவே மக்கள் மேல் மோடிக்கு கரிசனமும் பொங்கி வரும். திடீரென்று விலையெல்லாம் குறைப்பார். இப்போதுகூட சிலிண்டர் விலையை – பெட்ரோல் விலையை – டீசல் விலையைக் குறைத்திருக்கிறார். விலையை ஏற்றியது யார்? மோடி பிரதமரான நாள் முதல் விலை ஏறிக்கொண்டே இருந்தது. ஆனால், விலையேற்றத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் இருப்பார்… தேர்தல் நேரம் வந்துவிட்டால் மட்டும் விலையைக் குறைக்கும் பவர் வந்துவிடும்!

சமீபத்தில், மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் என்று உடனடியாக சிலிண்டர் விலையைக் குறைத்தார். வருடா வருடம்தான் மகளிர் தினம் வருகிறது! அப்போதெல்லாம் இதுபோன்று குறைத்தாரா?

இப்போது தேர்தல் வந்ததும் குறைக்கிறார்… என்னவொரு கருணை உள்ளம் அவருக்கு! தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான உள்ளம்!” எனச் சாடினார்.

‘கேரண்டியும் இல்லை… வாரண்டியும் இல்லை’

மேலும், “ மோடி பிரதமராகப் பொறுப்பேற்பதற்கு, 2013-க்கு முன்னால், சிலிண்டர் விலை எவ்வளவு? 410 ரூபாய்! பத்து ஆண்டுகள் கழித்து, 2023-இல் சிலிண்டர் விலை எவ்வளவு? 1103 ரூபாய்! ஐந்து மாநில தேர்தல் வந்துவந்தது! கூடவே மோடிக்கு இரக்கமும் வந்தது! சிலிண்டர் விலை குறைந்தது! இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது, அதனால் 100 ரூபாய் குறைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட பிரமதமர் மோடியை நீங்கள் நம்புகிறீர்களா? மக்கள் யாருமே அவரை நம்பவில்லை! உடனே மக்களை நம்ப வைக்க இப்போது புதிய விளம்பரம் ஒன்று செய்கிறார்! என்ன தெரியுமா? தாய்மார்கள் இங்கு நிறைய பேர் வந்திருக்கிறீர்கள், ஒரு மிக்சி விளம்பரம் வருமே நினைவு இருக்கிறதா? “ப்ரீத்திக்கு நான் கேரண்டி” என்று ஒரு விளம்பரம்! அந்த மாதிரி இவர், “இது மோடியின் கேரண்டி” என்ற புதிய விளம்பரத்துடன் வந்திருக்கிறார். உண்மையில அவரின் வாக்குறுதிகளுக்கு, கேரண்டியும் இல்லை! வாரண்டியும் இல்லை! பிரதமராக நாட்டு மக்களுக்கு நல்லது செய்யச் சொன்னால், பத்தாண்டுகளாகச் சொன்ன எதையுமே செய்யாமல், சேல்ஸ்மேன் மாதிரி கேரண்டி என்று விளம்பரம் செய்த உங்களுக்கு வெட்கமாக இல்லை? அவரின் கேரண்டிகளின் லட்சணம் என்ன?

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் போடலாம் என்று சொன்னாரே? 15 இலட்சம் இல்லை, 15 ஆயிரமாவது மக்களுக்கு கொடுத்தாரா? 15 ரூபாயாவது கொடுத்தாரா? அதுமாதிரியான கேரண்டியா? இதுதான் மோடி சொல்லும், கேரண்டியின் லட்சணம்! புதிது புதிதாக வாக்குறுதி கொடுத்தால், நிறைவேற்றாத பழைய வாக்குறுதியெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று பிரதமர் மோடி தப்புக் கணக்கு போடுகிறார்.

பிரதமர் மோடி அவர்களே… தேர்தலுக்குத் தேர்தல் நீங்கள் வெறும் வாயால் வடை சுடுவீர்கள் என்று மக்களுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. உங்களுக்கு ஆதரவு தர நாங்கள் ஏமாளிகளா? நாங்கள் என்ன சோற்றால் அடித்த பிண்டங்களா? என்று மக்கள் கேட்கிறார்கள்! பதில் சொல்லுங்கள் பிரதமரே ” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Alex rodriguez, jennifer lopez confirm split. Whаt wіll іt tаkе tо turn the tіdе ?. What to know about a’s first home game in west sacramento.