Amazing Tamilnadu – Tamil News Updates

‘தமிழகத்தின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள்’… முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்!

கடந்த 20.6.2024 முதல் 29.6.2024 வரை ஒன்பது நாள்கள் காலை, மாலை இரு வேளையும் தமிழ்நாடு சட்டப் பேரவை கூடி, மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று, ஒவ்வொரு துறை சார்ந்தும் முக்கிய பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப் பேரவைவிதி 110 மூலம் வெளியிட்ட பல திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள், தமிழகத்தின் முன்னேற்றத்தைக் குறிக்கோளாக கொண்டு அமைந்ததால், அவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

அவ்வாறு முதலமைச்சர் வெளியிட்ட சில முக்கிய அறிவிப்புகள் / திட்டங்கள் வருமாறு:

கிராமப்புறச் சாலைகள் மேம்பாடு

‘முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,000 கி.மீ. நீளமுள்ள ஊராட்சி ஒன்றியச் சாலைகள் மற்றும் கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி, தற்போது வரை 8,120 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 16 ஆயிரத்து 596 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மற்றும் 425 உயர்மட்டப் பாலங்கள் அமைக்கத் திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மொத்த மதிப்பு, 9 ஆயிரத்து 324 கோடியே 49 இலட்சம் ரூபாய். இதனைத் தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். வருகிற இரண்டு ஆண்டுகளில் ‘முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்’ மூலம் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

75, 000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

வரும் ஜனவரி 2026-க்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17 ஆயிரத்து 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3 ஆயிரத்து 41 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் நிரப்பப்படும்.

அதாவது, வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும். இது தவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்களும் நிரப்பப்படும்.

இவற்றை மொத்தமாகச் சேர்த்துப் பார்க்கையில், 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும்.

ஓசூரில் சர்வதேச விமான நிலையம்

அனைத்து மாவட்டங்களிலும் தொழில்களைப் பரவலாக உருவாக்கி வருகிறோம். இதில் மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் ஒசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது. இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் நகரத்தினை, தமிழ்நாட்டின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்குவதற்காக, அங்கு நவீன உட்கட்டமைப்புகளை அமைக்கும் நோக்கில், பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், ஒசூரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.

திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்

கோயம்புத்தூர்வாழ் பொது மக்களுக்கும் இளைய தலைமுறைக்கும் பயன்படும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம், கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தோம். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

அந்த வரிசையில், காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும். பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக் களஞ்சியமாக அது அமைந்திடும்.

சிதிலமடைந்த வீடுகள் மறுகட்டுமானம்

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தற்போது, தமிழ்நாடு முழுவதும் 1 இலட்சத்து 93 ஆயிரத்து 891 அடுக்குமாடிக் குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள், 28 ஆயிரத்து 643 குடியிருப்புகள் சிதிலமடைந்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர் குழுவால் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மறுகட்டுமானம் செய்யப்படும்.

இதன் முதற்கட்டமாக, 2024-2025 ஆம் ஆண்டில், சென்னை மாநகரில் கிழக்கு கல்லறை சாலை, கொடுங்கையூர், வ.உ.சி. நகர் போன்ற திட்டப்பகுதிகள், தஞ்சாவூரில் ஏ.வி.பதி நகர் திட்டப்பகுதி மற்றும் திருச்சியில் கோட்டக்கொல்லை திட்டப்பகுதி ஆகியவற்றில் உள்ள 6 ஆயிரத்து 746 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஆயிரத்து 146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுகட்டுமானமும் மற்றும் புதிய திட்டப்பகுதிகளில் கட்டுமானமும் மேற்கொள்ளப்படும்.

முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள்

மொத்தத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி 110 ன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் அனைத்தும், எப்பொழுதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என்பதைச் சொல்லிலும் செயலிலும் நிலைநாட்டும் விதமாக அமைந்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version