கனமழை… முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

மீட்பு குழுக்கள், நிவாரண முகாம்கள்,பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், பேரிடர் மீட்பு படை எனப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு முழுவீச்சில் தயாராகி உள்ளது.

தமிழ்நாட்டில்வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் வருகிற 6 ஆம் தேதி வரை மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின் பேரில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மீட்பு குழுக்களை ஏற்படுத்தவும், நிவாரண முகாம்களை அமைக்கவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இது தொடர்பான ஏற்பாடுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார்.

வாட்ஸ்அப் உதவி எண்

இந்த நிலையில், மாநில, மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகளுடனும், கூடுதலான அலுவலர்களுடனும் இயங்கி வருகின்றன. பொதுமக்கள், வாட்ஸ்அப் எண் 94458 69848 மூலம் புகார்களை பதிவு செய்யலாம். 424 கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள முன்எச்சரிக்கை அமைப்புகள் மூலம் சைரன் ஒலி, நேரடி ஒளிபரப்பு மூலம் எச்சரிக்கைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட எச்சரிக்கை செய்திகள் பரப்பப்படுகின்றன.

14 கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 65,000 முதல் நிலை மீட்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதோடு, 16 மாவட்டங்களில் ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் 5500 தன்னார்வலர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும், தேடல், மீட்பு உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

4967 நிவாரண முகாம்கள்

கடலோர மாவட்டங்களில் 1.13 லட்சம் நபர்கள் தங்கும் வகையில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், சமூகக் கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என மொத்தம் 4967 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தமட்டில் 169 நிவாரண முகாம்கள் உள்ளதோடு, மழைநீரை வெளியேற்ற 260 பம்புகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

பேரிடர் மீட்பு படை வீரர்கள்

பேரிடர் காலங்களில் தேடல், மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 400 வீரர்கள் கொண்ட 12 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தேசிய பேரிடர் மீட்புப்படையின் குழுக்கள் அரக்கோணத்திலும், சென்னையிலும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாளை மிக கனமழை பெய்யலாம் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை, நீலகிரி, தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

… my friends hate me ! ”. mjm news – we report to you !. Quotes on the israel hamas war.