வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு கருணாநிதி செய்ய நினைத்தது என்ன?

வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அவற்றைத் தீர்த்து வைக்க கருணாநிதி ஒரு அமைப்பை உருவாக்கினார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அவரின் முன்னிலையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் “ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்” எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று எனக்கு இப்போது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டிற்கு இப்போதுதான் நான் முதல்முறை வருகிறேன். ஆனால், பலமுறை வந்ததைப் போன்ற உணர்வைத் தரும் வரவேற்பை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கடல் கடந்து வந்து வெளிநாட்டில் வாழும் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்.

“நீங்கள் பிறந்த உங்களுடைய தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்து கொண்டிருக்கிறீர்கள்; செய்யப் போகிறீர்கள்” என்று கூறிய முதலமைச்சர், “செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

“உலக முதலீட்டாளர் மாநாட்டை அண்மையில் வெற்றிகரமாக நடத்தி, அதன் மூலமாகத் தமிழ்நாட்டிற்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறோம். அது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கு மட்டுமல்ல; இந்தியாவைக் கடந்து, இன்றைக்குக் கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கும் அது பெருமைதான்!”என்றார்.

“அயல்நாட்டில் இருக்கக் கூடியவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் – ஆபத்து ஏற்பட்டால், அதற்குத் தமிழ்நாடு துணை நிற்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது கருணாநிதி ஒரு அமைப்பை உருவாக்கினார் என்றும் ஆனால் சில நாட்களுக்குள்ளாக ஆட்சி கலைக்கப்பட்டு விட்டதால் அது செயல்படாமல் போய்விட்டது” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

“கருணாநிதி என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதனை இப்போது செய்ய காத்திருக்கிறோம்; தயாராக இருக்கிறோம்” என்று கூறிய முதலமைச்சர், “அண்மையில் கூட, வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களைச் சென்னைக்கு வரவழைத்து, அவர்களுடன் கலந்து பேசி; இதுவரை அவர்களை இரண்டு மூன்று முறை அழைத்துக் கூட்டம் போட்டு கலந்து பேசி, அவர்களது பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைத்திருக்கிறோம்” என்றார்.

“பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று இருந்தாலும், இந்த ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன். என் மீது ஒவ்வொருவரும் பாசமும் நேசமும் அன்பும் கொண்டு அளித்த அந்த உபசரிப்பு என்னை நெகிழ வைத்து இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்களை இந்த நேரத்தில் தெரிவித்து, எனது உரையை நிறைவு செய்கிறேன். நன்றி. வணக்கம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

» kış saatine neden alışamıyoruz ?. Tägliche yacht und boot. hest blå tunge.