Amazing Tamilnadu – Tamil News Updates

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தொகுதி நிலவரம் என்ன… வெற்றிவாய்ப்பு யாருக்கு?

ஜூலை 10 ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் திமுக, நாம் தமிழர் கட்சியைத் தொடர்ந்து, பாமகவும் இன்று தனது வேட்பாளரை அறிவித்து. இதனையடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தோல்வி அதிர்ச்சியிலிருந்து அதிமுக இன்னும் மீளாத நிலையில், அந்த கட்சியின் வேட்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படாமலேயே உள்ளது.

வேட்பாளர்கள் யார் யார்?

2021 சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்ற நிலையில், விக்கிரவாண்டி தொகுதியிலும் திமுக வேட்பாளராக போட்டியிட்ட என்.புகழேந்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் புகழேந்தி திடீரென காலமானதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானது. இதையடுத்து, அங்கு ஜூலை 10 ல் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில், திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதேபோன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் அபிநயா (முதுகலை ஓமியோபதி மருத்துவம்) போட்டியிடுவார் என அக்கட்சி நேற்று அறிவித்தது. அதேபோன்று பாமக வேட்பாளராக அக்கட்சியின் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுவார் என அக்கட்சி இன்று அறிவித்துள்ளது. அதிமுக மட்டும் இன்னும் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது.

நம்பிக்கையில் திமுக

2008 ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது, விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தோற்றுவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்கள், பொதுவாக 8,000 முதல் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராகவே இருப்பர். கடந்த எட்டு தேர்தல்களில் (நான்கு மக்களவைத் தேர்தல்கள், மூன்று சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் ஒரு இடைத்தேர்தல்), வெற்றியின் சராசரி வித்தியாசம் 15,400 வாக்குகள்.

2019 அக்டோபரில், இந்தத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் 46,924 வாக்குகள் வித்தியாசத்தில், திமுகவைத் தோற்கடித்து அதிமுக வெற்றி பெற்றது. இந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40/40 என்ற கணக்கில் பெற்ற வெற்றியால் மிகுந்த உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் இந்த தொகுதியில் தேர்தலை எதிர்கொள்கிறது. ஆளுங்கட்சியான திமுக. நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு, அதிமுக பெற்ற வாக்குகள் வித்தியாசத்தை விட இன்னும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அக்கட்சியின் உள்ளூர் உடன் பிறப்புகள்.

ஆவேசத்தில் பாமக

பாமக-வைப் பொறுத்தவரை இந்த தொகுதியில் வன்னியர்கள் அதிகம் என்பதால், எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. இத்தனைக்கும் 2010 ல் நடைபெற்ற பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக-விடம் பாமக தோற்றதிலிருந்து அந்த கட்சி, ‘இனி இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை’ என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது.

இந்த நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தொகுதியில் பாஜக-வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் போனது, அக்கட்சிக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும், தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸின் மனைவி செளமியா அன்புமணி தோல்வியடைந்தது அக்கட்சிக்கு கவுரவ பிரச்னையாக பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாகவே, இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்ற எண்ணத்தில், ‘இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை’ என்ற தனது கொள்கையைத் தளர்த்திக்கொண்டு களம் இறங்கி உள்ளது. முன்னதாக கூட்டணி கட்சியான பாஜக-விடமும் தனது நிலைப்பாட்டை விளக்கி, இந்த இடைத்தேர்தலில் தாங்களே போட்டியிடுவதாக கூறி, அதன் ஆதரவையும் பெற்றுள்ளது.

பாஜக வாக்குகள் கைகொடுக்குமா?

ஆனால், பாஜக-வின் வாக்குகள் பாமக-வுக்கு எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை. ஏனெனில் சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் பாமக-வுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக-வுக்கு கிடைத்த தங்களது வாக்குகளைப் போன்று, பாமக போட்டியிட்ட தொகுதிகளில் பாஜக வாக்குகள் எதுவும் பெரிய அளவில் தங்களுக்கு கைகொடுக்கவில்லை என்பதே பாமக-வினரின் கூற்றாக உள்ளது.

இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில், விழுப்புரத்தில் வெற்றி பெற்ற வி.சி.க., விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில், அதிமுக பெற்றதை விட, சுமார் 6,800 ஓட்டுகள் அதிகம் பெற்றது. இதை கருத்தில்கொள்ளும்போது, இந்த இடைத்தேர்தலும் பாமக-வுக்கு சிக்கலாகவே இருக்கும் எனத் தெரிகிறது. இருப்பினும் எப்படியேனும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற ஆவேசம் அக்கட்சியினர் மத்தியில் நிலவுகிறது.

நம்பிக்கையில் நாம் தமிழர்

சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்துப்போட்டியிடும் நிலையில், சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி 8.19 சதவீத வாக்குகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தை பெற்றது. இதனால், அக்கட்சியினர் வெற்றி வாய்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும் புதிய உற்சாகத்துடன் இந்த தேர்தலை எதிர்கொள்கின்றனர்.

ஆமை வேகத்தில் அதிமுக

அதிமுக-வைப் பொறுத்தவரை, அக்கட்சி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இன்னும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், சமீபத்திய நாடாளுமன்ற தேர்தல் தோல்வியிலிருந்து அக்கட்சி இன்னும் மீளவில்லை என்பதையே இது காட்டுகிறது. போதாதற்கு பாஜக-வுடன் கூட்டணி வைக்காதது தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அக்கட்சியின் மாவட்டத் தலைவர்கள் சிலர் அதிருப்தி குரல் எழுப்பி இருப்பதும் அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கூட்டணியும் வலுவாக இல்லாத நிலையில், அதிமுக-வுக்கு இந்த இடைத்தேர்தலும் இன்னொரு நெருக்கடியாக தான் அமையும் என்பதே களம் நிலவரமாக உள்ளது.

இத்தகைய காரணங்களால், தற்போதைய சூழ்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக-வுக்கே நிலைமை சாதமாக இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version