Amazing Tamilnadu – Tamil News Updates

மு.க. ஸ்டாலினின் மூன்றாண்டு கால ஆட்சி எப்படி?

மிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவியேற்று மூன்றாண்டுகள் முடிவடைந்து, நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் மு.க. ஸ்டாலின் கொடுத்த ஒரு முக்கியமான வாக்குறுதி , “திமுக-வுக்கு வாக்களிக்க மறந்தவர்கள், இவருக்கு வாக்களிக்காமல் போனோமே என்று வருந்தும் அளவுக்கு நல்லாட்சியைத் தருவேன்” – என்பது தான்.

சொன்னபடியே அவர் கொண்டுவந்த, மகளிருக்கான இலவச பேருந்து பயணம் திட்டம், பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டம் – முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம் – மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் – நான் முதல்வன் திட்டம், விவசாயிகளுக்கென தனி வேளாண் நிதி நிலை அறிக்கை – விளையாட்டுத்துறையில் புதுப்பாய்ச்சல் – 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக்கும் தொழில்துறை திட்டங்கள், கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என இந்த மூன்று ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்றுத்தந்துள்ளது.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 6,115 புத்தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

‘நான் முதல்வன்’ என்ற முதலமைச்சரின் கனவுத் திட்டமானது தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்களை அனைத்துத் திறமைகளும் கொண்டவர்களாக உருவாக்கி வருகிறது. ஒரு மாநிலத்தின் மிக முக்கியமான வளம் என்பது அறிவு வளம் ஆகும். அதனை உருவாக்கும் நோக்கில்தான் நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களை உருவாக்கித் தந்துள்ளார் முதலமைச்சர்.

இது குறித்துப் பேசும் திமுக-வினர், “இது ஐந்தாண்டு திட்டம் அல்ல, தலைமுறை தலைமுறையாக உதவப்போகும் வாழ்நாள் திட்டம்” என்கின்றனர்.

சமூகத்தின் சரிபாதியான பெண்களுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக வழங்கும் ஆயிரம் ரூபாயும், கட்டணமில்லா விடியல் பயணமும் சமூக – பொருளாதார– குடும்ப, மனித வளர்ச்சிக்கு உரமாக அமைந்துள்ளது. ‘எங்க அண்ணன் தரும் தாய் வீட்டுச் சீர்’ என்று மகளிர் மனம் நெகிழ்ந்து வருவதாக பெருமிதத்துடன் குறிப்பிடும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!

மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது! ” எனத் தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு தொடர்ந்து தலைநிமிரட்டும்… முன்னேறிச் செல்லட்டும்..!

Exit mobile version