Amazing Tamilnadu – Tamil News Updates

பத்திரப்பதிவு: பட்டாவுக்காக இனி காத்திருக்க தேவையில்லை… புதிய முறை அறிமுகம்!

சொத்துகளைப் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரம் இருந்தால் மட்டும் சொத்து பத்திரமாக இருப்பதாக அர்த்தம் கொள்ள முடியாது. அது, சொத்து வாங்குவதன் முதல் படிதான். அந்தச் சொத்துக்கு பட்டா பெற்றால் மட்டுமே, அது சம்பந்தப்பட்ட நபருக்கு முழுமையாகச் சொந்தமாகும்.

ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தைப் பலருக்கும் விற்கும் காலம் இது. அவ்வாறு சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தை எல்லோருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது. இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் ஏற்படும். ஒரு சொத்தைப் பதிவு செய்யும் நபர், அதைப் பட்டாவாக மாற்றிக் கொண்டுவிட்டால், அந்தப் பிரச்னை இருக்காது. எனவே பட்டா என்பது மிகவும் முக்கியமானது.

பட்டா பெறுவதில் புதிய முறை

அந்த வகையில், பட்டா வாங்குவதற்காக இதுவரை இருந்துவந்த முறையில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதன்படி, ஒரு நிலத்தையோ, வீட்டையோ அல்லது வேறு சொத்தையோ வாங்குபவர் அதன் பரப்பளவில் மாற்றங்கள் ஏதும் இல்லாத பட்சத்தில் உடனடியாக அவரது பெயர் ஆன்லைன் பட்டா மாறுதல் இணையதளத்தில் புதுப்பிக்கப்படும். மாவட்டம், தாலுகா, நகரம்/கிராமம், சர்வே நம்பர், உட்பிரிவு போன்ற உள்ளீடுகளைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் ஆன்லைன் பட்டாவை https://eservices.tn.gov.in என்ற அரசு இணையதளத்தில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

சொத்தைப் பதிவு செய்தவுடன், புதிய உரிமையாளரின் பெயர் உடனடியாக பட்டா சான்றிதழில் தோன்றும் என்றும், அதனை https://tnreginet.gov.in/portal/ என்ற இணையப்பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரான மதுசூதன் ரெட்டி “நிலத்தை வாங்குபவர்கள் பத்திரப்பதிவு முடிந்தவுடன் ஆன்லைன் பட்டாவை உடனடியாக இணையத்தில் பார்த்துப் பதிவிறக்கிக் கொள்ள முடியும். குறிப்பிட்ட சொத்தினை விற்பவரின் பெயரில் தனிப்பட்ட பட்டா இருந்தால் மட்டுமே பெயர் மாற்றம் ஏற்படும். அதே போல, அந்த சொத்தின் பரப்பளவும் மாறாமல் இருக்கவேண்டும்” என்று கூறினார்.

காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி

நிலம் வாங்குபவர்களுக்கு பத்திரப்பதிவு செய்யும்போது எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். பத்திரப்பதிவு முடிந்து, பெயர் மாற்றம் ஆனவுடன் அதனைத் தெரியப்படுத்த வாங்குபவருக்கும் விற்பவருக்கும் எஸ்எம்எஸ் அனுப்பப்படும். சொத்து விற்பவர்கள் பெயரில் பட்டா இல்லையென்றால் வாங்குபவர்கள் இ-சேவை மையம் மூலம் பட்டா பெற விண்ணப்பிக்க வேண்டும். அது 15 நாட்களில் அங்கீகரிக்கப்படும். உட்பிரிவு செய்யத் தேவைப்படும் பட்டா கோரிக்கைகளுக்கு, 30 நாட்களுக்குள் அதற்கான கணக்கெடுப்பை முடித்துத் தர வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது.

பட்டா பெறுவதற்கு வருவாய்த்துறைக்கு ஒரு மாதத்திற்கு 3 லட்சம் விண்ணப்பங்கள் வருகின்றன. அதில் 2 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. முன்னர், நில அளவையர்கள் மற்றும் பணியாளர்கள் குறைவாக இருந்ததால் பட்டா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது, அந்த இடங்கள் நிரப்பப்பட்டதால் பட்டா வழங்கக் காலக்கெடு நிர்ணயித்துள்ளோம். இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தானியங்கி பட்டா பெயர் மாற்றும் வசதியில், உட்பிரிவு செய்யத் தேவைப்படாத, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளில் அடுக்கு மாடி குடியிருப்பு, தனி வீடு, நிலம் வாங்குபவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

தானியங்கி நிலப் பட்டா மாற்றம் செய்யும் வசதி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதில் பெயர் மாற்றம் செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதிக்காக பல நாட்கள் காத்திருக்கும் நிலை இருந்தது. ஆனால், தற்போது வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை இணையதளங்கள் இணைந்து, இந்தத் திட்டம் தமிழ்நாடு முழுக்க செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், பட்டா ஆவணத்தில் இணையதளத்தில் க்யூஆர் கோட் மூலம் சரிபார்க்கும் வசதி உள்ள தென்றும், அதிகாரப்பூர்வ சான்று இல்லாமலும் ஆன்லைன் பட்டா செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version