நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 க்கு40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை ஏற்படுத்தி உள்ளதாக அக்கட்சியினர் பெருமிதத்துடன் கூறி வருகின்றனர்.
அதே சமயம், பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களும் கூட்டணி கட்சியினரும், திமுக கூட்டணிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியினால் தமிழ்நாட்டுக்கு எந்த பயனும் இல்லை என்று விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக தேர்தல் முடிவு வெளியானதில் இருந்தே சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.
விமர்சித்த தமிழிசை செளந்தரராஜன்
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதை விடவும் எந்த பலனும் இல்லாமல் காங்கிரஸ், திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைப்பதிருப்பது தான் கவலை அளிக்கிறது. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் எப்போதும் இந்த தவறை செய்கிறார். எதிரணியில் இருந்து கொண்டு தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டியதை கிடைக்கவிடாமல் துரோகம் செய்து வருகிறார்” எனக் கூறினார்.
‘திமுக வெற்றியினால் உடைக்கப்பட்ட பாஜக முதுகெலும்பு’
இந்த நிலையில், பாஜக மற்றும் அவரது ஆதரவாளர்களின் இத்தகைய கருத்துகளுக்கு திமுகவினரும் அதன் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் உரிய பதிலடியைக் கொடுத்து வருகின்றனர்.
முதலில் பாஜக தனித்து பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு இந்தியா கூட்டணிக்கு கிடைத்த 234 இடங்கள் தான் காரணம் என்றும், தேசிய அளவில் இந்த முறை பாஜக-வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத வகையில், ‘இந்தியா’ கூட்டணி இந்த எண்ணிக்கையிலான இடங்களைப் பெற முடிந்ததற்கு ஸ்டாலினின் முன்னெடுப்பும் முக்கிய காரணம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அதிலும், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கிடைத்த 40/40 வெற்றிதான், பாஜக-வின் முதுகெலும்பு உடைக்கப்பட்டதற்கு முக்கிய காரணம். இனிமேல் கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்த உள்ள மோடியால், கடந்த ஆட்சியைப் போன்று நினைத்த சட்டங்களையெல்லாம் கொண்டு வந்துவிட முடியாது. மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே சிவில் சட்டம் போன்றவற்றையெல்லாம் அவ்வளவு எளிதில் நிறைவேற்றிவிட முடியாது” என்றும் கூறுகின்றனர்.
‘தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது’
மேலும், திமுக தரப்பில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி-யும் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில்,
“தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி தலைக்கு மேல் தூக்கி வணங்கியிருக்கிறார்.
ஜனநாயகம் என்பது அதிகாரம் செலுத்துவதில்லை- அடங்கி அரவணைத்துச் செல்வது என்பதை பத்தாண்டுகளுக்குப் பிறகு பாஜக உணரத் தொடங்கியிருக்கும்; தாங்கள் எதைச் செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கும்.
இனி பாஜக அசைக்கவே முடியாத சக்தி என்று ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு மக்களை நம்ப வைக்க நடந்த முயற்சிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது.
ஜனநாயகத்தில் மக்களே அதிகாரம்மிக்கவர்கள்; தனிமனிதர்களோ அல்லது ஒரு இயக்கமோ மக்களைவிட அதிகாரம் கொண்டது இல்லை என்பதை இந்தத் தலைமுறைக்கு 2024 தேர்தல் உணர்த்தியிருக்கிறது.
ஒருவேளை தமிழ்நாடு வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் பாஜக_வுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கக் கூடும். மேலே சொன்னது எதுவுமே நடக்காமல் போயிருக்கலாம்…
தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது; மக்களே முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறது… அதனால்தான் இதன் பெயர் ‘நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.