Amazing Tamilnadu – Tamil News Updates

மகளிர் முன்னேற்றத்துக்கான தமிழக அரசின் மகத்தான திட்டங்கள்!

மிழக முதலமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது கொரோனா நோய்த் தொற்று தமிழ்நாட்டை வாட்டிக் கொண்டிருந்தது. உயிருக்கு அஞ்சி எல்லோரும் ஓடி ஒளிந்தனர். ஆனால், முதலமைச்சரோ அச்சம் சிறிதும் இன்றி, இரவும் பகலும் பாடுபட்டு தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்குதயக்கம் இன்றி நிதியுதவிகளை வழங்கினார்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 430 கோடி நிவாரணம்

கொரோனா நோய்த்‌ தொற்றினால்‌ பாதிக்கப்பட்டு பெற்றோர்‌ இருவரையும்‌ இழந்த, தாய்‌ அல்லது தந்தையை இழந்த 382 குழந்தைகளின்‌ பெயரில்‌ தலா ரூ.5.00 இலட்சம் வீதம் ரூ.19.10 கோடி; வங்கிகளில் வைப்பீடு செய்து குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும்‌போது அவர்களுக்கு வட்டியுடன்‌ வழங்கும் திட்டத்தை உருவாக்கினார்.

மேலும், கொரோனா நோய்த்‌ தொற்றினால்‌ பாதிக்கப்பட்டு தாய்‌ அல்லது தந்தையை இழந்த 18 வயதுக்குட்பட்ட 13,682 குழந்தைகளின்‌ பெற்றோர்களுக்கு தலா ரூ.3.00 இலட்சம்‌ வீதம்‌ 410.46 கோடி ரூபாயையும் மற்றும் இலங்கைத் தமிழ் ‌அகதிகளின்‌ 9 குழந்தைகளுக்கு தலா ரூ.3.00 லட்சம் வீதம் ரூ.27 லட்சம் ரூபாயையும் கூடுதலாக ரூ.437.46 கோடி நிவாரணத் ‌தொகையாக வழங்கினார்.

விடியல் பேருந்து திட்டம்

பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்கள் ஆகியோர் நலன் கருதி கொண்டுவரப்பட்ட கட்டணமில்லா ‘விடியல் பயணம் திட்ட’த்தில் 6661.47 கோடி ரூபாய்ச் செலவில் மகளிரும் மாற்றுத் திறனாளிகளும் திருநங்கைகளும் ஏறத்தாழ 450 கோடி முறை பயணம் மேற்கொண்டு, மாதம் ஏறத்தாழ 1,000 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தெலுங்கானா உட்பட பல மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

திராவிட மாடல் அரசின் மிக முக்கிய திட்டமான காலை உணவுத் திட்டம், 30.992 பள்ளிகளில் 18.50 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் ரூ.404.41 கோடியில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. இந்த ஆண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்படுகிறது.

புதுமைப் பெண் திட்டம்

மகளிர் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் நோக்கில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி புதுமைப் பெண் திட்டம், 2022 ஆகஸ்ட் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று தடையில்லாமல் உயர்கல்வியைத் தொடரும் பொருட்டு அனைத்து மாணவிகளுக்கும் மாதம் தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

பணிபுரியும் மகளிர் விடுதிகள்

முதலமைச்சரின் உத்தரவின் பேரில் திருச்சி, கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் 688 பணிபுரியும் மகளிர் பயன் பெறும் வகையில் ரூ31.07 கோடி செலவில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டு, இவ்விடுதிகளில் 259 பணிபுரியும் மகளிர் பயனடைந்து வருகின்றனர். இரண்டாம் கட்டமாக ஓசூர், திருவண்ணாமலை மற்றும் பரங்கிமலை ஆகிய 3 இடங்களில் 432 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.35.87 கோடி செலவில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கட்டப்படுகின்றன.

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்

​ரூ.218.88 கோடி செலவில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 87,501 குழந்தைகள் பயனடைந்தனர். ​2021-22 ஆண்டில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் 18 வயது நிரம்பிய 1,43,908 குழந்தைகளுக்கு ரூ.341.30 கோடி முதிர்வுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தொட்டில் குழந்தைத் திட்டத்தின்கீழ் 446 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 2021 முதல் டிசம்பர் 2023 வரை 7343 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

திருமண நிதியுதவித் திட்டத்தில் சாதனை

திருமண நிதியுதவி திட்டங்களின்கீழ், 3 ஆண்டுகளில் 1 இலட்சத்து 26,637 மகளிர்க்கு 1047 கோடி ரூபாயை திருமண நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 68,927 மகளிர்க்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதியுதவிகளும்; 57,710 மகளிர்க்கு நிதியுதவிகளும் வழங்கப்பட்டு மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இப்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் நலனில் தனிக் கவனம் செலுத்தி பல திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால் மகளிர், குழந்தைகள், மாற்றுத்திறனானிகள் என அனைவரும் பாதுகாப்புடன் வாழ்வதாக தமிழக அரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

Exit mobile version