Amazing Tamilnadu – Tamil News Updates

சென்னையைக் கடந்து சென்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்… 7 நிமிடங்கள் கண்டு ரசித்த பொதுமக்கள்!

விண்வெளியில் நாசா உடன் இணைந்து பல்வேறு நாடுகள் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம், விண்வெளி வீரர்கள் வாழவும், பரிசோதனைகளை மேற்கொள்ளவும் கூடிய இடமாக செயல்படுகிறது.

அதன்படி சர்வதேச விமானக் குழுக்கள், ஏவுகணை, வாகனங்கள், விமான செயல்பாடுகளின் பயிற்சி, பொறியியல் மற்றும் மேம்பாட்டு வசதிகள், தகவல் தொடர்பு, சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றின் செயல்பாடுகள் இந்த விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பூமியை வலம் வரும் விண்வெளி ஆய்வு மையம்

இந்த ஆய்வு மையம், மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில், தினமும் 15.5 முறை பூமியை வலம் வருவதாகவும், அவ்வாறு விண்வெளி மையம் சுற்றி வருகையில் சில நேரங்களில் பூமிக்கு மிக அருகில் வருவதும் உண்டு என்றும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த விண்வெளி மையம் குறிப்பிட்ட பகுதிகளில் வானில் தெரியும் என்றும், அப்போது அவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் தெரிவித்திருந்த நாசா, அந்த நேரம் பற்றிய விவரங்களையும் வெளியிட்டிருந்தது.

கண்டுகளித்த சென்னை மக்கள்

அந்த வகையில், சென்னையில் இருந்து மிக அருகில், சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நேற்று கடந்து செல்லும் என்று நாசா அறிவித்திருந்தது. அதன்படி, நேற்றிரவு தென் மேற்கு திசையில், இரவு 7.09 முதல் 7.16 மணி வரை சுமார் 7 நிமிடங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடந்து செல்வதை காண முடிந்தது.

இந்த காட்சியை பொதுமக்கள், அறிவியல் ஆர்வலர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வெறும் கண்ணால் கண்டு ரசித்தனர். அப்போது, வானில் நட்சத்திரம் நகர்வதை போன்று அந்த நிகழ்வானது இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். சென்னை பெரியார் அறிவியல் மையம் போன்ற இடங்களில், பொதுமக்கள் இதனைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Exit mobile version