விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டை மராத்தியர்களின் ஆட்சிக் காலத்தில் பாராட்டப்பட்ட ஒரு புராதான அரணாகும்.
மராத்தியர்களால் கட்டப்பட்ட இந்தியாவின் ராணுவக் கோட்டைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் 44வது உலக பாரம்பரிய தளமாக இந்தக் கோட்டைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சிக் கோட்டையும் இடம்பெற்றுள்ளது. பாரிஸில் நடைபெற்ற யுனெஸ்கோவின் பாரம்பரியக் குழுவின் 47வது அமர்வில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. 2024-25 சுழற்சிக்காக பரிந்துரைக்கப்பட்ட இந்தக் கோட்டைகள், ராணுவத் திட்டமிடல் மற்றும் கோட்டைக் கட்டிடக் கலையின் சிறப்பை வெளிப்படுத்துபவையாக உள்ளன.
யுனெஸ்கோவால் புராதான சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்ட மராத்தியர்களின் கோட்டைகளில் சல்ஹேர், ஷிவ்னேரி, லோகாட், கந்தேரி, ராய்காட், ராஜ்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா, விஜயதுர்க், சிந்துதுர்க் ஆகியவை அடங்கும். இவற்றுடன் தமிழ்நாட்டின் செஞ்சிக் கோட்டையும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், இந்தியாவின் கலாச்சார, வரலாற்று மற்றும் இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த உலக பாரம்பரிய தளங்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. இந்த அங்கீகாரத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 18, 2025 அன்று, இந்தியாவின் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சிக் கோட்டையை, பல்லவர்களின் வழித்தோன்றலான காடவ மன்னன் செஞ்சியர் கோன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த அனந்தக்கோன் என்பவர் கட்டியதாகவும் இரு கருத்துகள் உள்ளன. 1190ஆம் ஆண்டு தொடங்கி 1240ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாற்றுத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உட்புக முடியாத கோட்டைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மராத்திய மன்னர் சிவாஜி இதனை “எவராலும் உட்புக முடியாத சிறந்த கோட்டை” எனப் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் மற்றும் 12 கி.மீ. நீளமுள்ள மதில் சுவர்களால் முக்கோண வடிவில் இயற்கையோடு இணைந்து இந்தக் கோட்டை அமைந்துள்ளது. இதனால், பல போர்களையும் தாங்கி, இன்றும் கம்பீரமாக காட்சியளித்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
கோட்டையின் உள்ளே கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர் தங்குமிடங்கள், நெற்களஞ்சியம் மற்றும் எதிரிகளால் கடக்க முடியாத ஆழமான அகழிகள் உள்ளன. எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், சிறைச்சாலை, படையினர் பயிற்சிக் கூடம், செஞ்சியம்மன் கோயில் மற்றும் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளமும் இதில் அடங்கும். இவை தென்னிந்திய மன்னர்களின் கட்டடக் கலைத் திறனை வெளிப்படுத்துகின்றன. கோட்டையின் கீழ்ப்பகுதிக்கு செல்ல வேலூர் வாயில் மற்றும் பாண்டிச்சேரி வாயில் என இரு நுழைவு வாயில்கள் உள்ளன. இவற்றின் வழியாகச் செல்ல 24 அடி அகலமும் 60 அடி ஆழமும் கொண்ட கணவாயைக் கடக்க வேண்டும்.
கோட்டையின் அரணாக கிருஷ்ணகிரி (ராணிக்கோட்டை), சக்கிலிதுர்கம் (சந்திரகிரி) மற்றும் ராஜகிரி ஆகிய குன்றுகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இவற்றை இணைக்கும் வகையில் 20 மீட்டர் அகலமுள்ள கீழ்க்கோட்டை கட்டப்பட்டுள்ளது. இதில் பள்ளிவாசல், வெங்கட்ரமணசாமி கோவில் ஆகியவை உள்ளன. ராஜகிரியின் உச்சியில் அரங்கநாதர் கோயில் உள்ளது. போர்க்காலத்தில் எதிரிகள் உள்ளே நுழையாமல் தடுக்கும் இழுவைப் பாலமும் இங்கு உள்ளது. இந்தப் பாலத்தை காவலர்கள் அகற்றிவிடுவதால், எதிரிகள் உள்ளே நுழைய முடியாமல் தவித்தனர். இதனால், செஞ்சிக் கோட்டை இந்தியாவின் மிகப் பாதுகாப்பான கோட்டைகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.

