தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தின் சிறப்புகளையும், தமிழர்களின் தொன்மையான வரலாற்றையும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் வகையில், திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ள ‘பொருநை அருங்காட்சியகத்தை’ தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வரும் டிசம்பர் 21-ம் தேதி திறந்து வைக்கிறார்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவையில் 110-விதியின்கீழ் முதல்வரால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், திருநெல்வேலி ரெட்டியார்பட்டி பகுதியில் சுமார் 13 ஏக்கர் நிலப்பரப்பில், 67.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 54,296 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வளாகம் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை என தனித்தனி கட்டிடத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் பாரம்பரியக் கட்டிடக்கலையைப் பிரதிபலிக்கும் வகையில் முற்றம் மற்றும் தாழ்வாரங்களுடன் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
1.அரிய தொல்பொருட்கள்: சிவகலையின் இரும்புத் தொன்மை, ஆதிச்சநல்லூரின் பண்பாட்டுக் கூறுகள் மற்றும் கொற்கைத் துறைமுகத்தின் வணிகச் சிறப்புகளை விளக்கும் அரிய பொருட்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
2.தொழில்நுட்ப வசதிகள்: 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பயன்படுத்திய இரும்பு உருக்கும் தொழில்நுட்பம், மாதிரி வடிவங்களாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஐந்திணைகளை விளக்கும் 5D திரையரங்கம் மற்றும் 15 நிமிட ஒளி-ஒலி காட்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும்.
3.வணிக வரலாறு: பண்டைய தமிழர்கள் மேற்கொண்ட கடல்வழி வணிகத்தை விளக்கும் வகையில் இரண்டு பிரம்மாண்ட கப்பல் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியகம் மட்டுமன்றி, திறந்தவெளி அரங்கம், கலைநயமிக்க நீர்த்தடாகம், கைவினைப் பொருட்கள் விற்பனையகம், மின்கல வாகன வசதி மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகள் என முழுமையான சுற்றுலாத் தலமாக இது மாற்றப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான தொடர்பை விளக்கும் குறியீடுகளும் இங்கே ஒப்பீட்டுடன் விளக்கப்பட்டுள்ளன.

