Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

ரூ.76 கோடியில் புதுப்பொலிவு பெறும் மதுரை வைகை ஆறு!

New Project (7)

மதுரை மாநகரின் மிக முக்கிய நீராதாரமாகவும் அடையாளமாகவும் திகழும் வைகை ஆற்றைப் பாதுகாக்கவும், இரு கரைகளையும் அழகுபடுத்தி மக்கள் ரசிக்கும்படியான பொழுதுபோக்கு இடமாக மாற்றவும் உலக வங்கி நிதியுதவியுடன் மதுரை மாநகராட்சி நிர்வாகம் ரூ.76.16 கோடி மதிப்பில் ஒரு பிரம்மாண்ட கூட்டுத் திட்டத்தைத் தயாரித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், கோச்சடை முதல் விரகனூர் மதகு அணை வரையிலான 14 கிலோமீட்டர் தொலைவுக்கு ஆற்றின் நீரோட்டத்திற்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாத வகையில் இரு கரைகளும் முழுமையாகச் சீரமைக்கப்படவுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, கோச்சடையில் மாநகராட்சிக்குச் சொந்தமாக உள்ள 14 ஏக்கர் நிலத்தில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் வண்டியூர் பூங்காவைப் போன்ற அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடனும் கூடிய பிரம்மாண்ட பூங்கா ஒன்று அமையவுள்ளது. மேலும், வைகை கரைகளில் மக்கள் பயன்பாட்டிற்காகச் சிறு பூங்காக்கள், பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் (Gym), யோகா மையங்கள், வைகை ஆற்றின் அழகை ரசிப்பதற்கான பிரத்யேக ‘வியூ பாயிண்ட்’ மற்றும் மக்கள் ஆற்றில் இறங்கிப் பாதுகாப்பாக நீராட ஏதுவாகப் படித்துறைகளும் கட்டப்படவுள்ளன.

மதுரையின் உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை மக்கள் எவ்வித சிரமமும் இன்றிப் பாதுகாப்பாகக் காண்பதற்காக, ஆழ்வார்புரம் பகுதியில் தலா 50 பேர் அமரக்கூடிய வசதியுடன் இரண்டு நிரந்தரப் பார்வையாளர் மாடங்கள் அமைக்கப்படவுள்ளன. வைகை கரையைச் சுற்றியுள்ள சாலைகளில் பொதுமக்கள் இரவு நேரங்களிலும் அச்சமின்றி நடமாடும் வகையில் நவீன அலங்கார ஹைடெக் மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளன.

ஆற்றில் இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தற்போது ‘ஏஐ’ (AI) கேமராக்களைப் பொருத்தி வைகை ஆற்றைக் கண்காணிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது பொதுப்பணித் துறையிடம் இதற்கான தடையில்லா சான்று (NOC) பெறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் ஆற்றிற்குள் மண்டிப்போயுள்ள முட்புதர்கள், ஆகாயத்தாமரைகள் மற்றும் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, மாநகரின் நிலத்தடி நீரை மேம்படுத்தும் இந்த உள்கட்டமைப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கப்படவுள்ளன.

Exit mobile version