கொடைக்கானல் அப்ஸர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலைத் துறையால் பராமரிக்கப்படும் ரோஜா பூங்கா, தற்போது சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில், 1,500 வகைகளைச் சேர்ந்த சுமார் 16,000 ரோஜா செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
தற்போது கோடை சீசனை முன்னிட்டு, பூங்காவில் சிவப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை, ஆரஞ்சு எனப் பல வண்ணங்களில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகின்றன. மே 20 முதல் பிரையன்ட் பூங்காவில் 63-வது மலர்க் கண்காட்சி நடந்து வரும் நிலையில், அதற்கு அடுத்தபடியாகப் பயணிகள் அதிகம் கூடும் இடமாக இந்த ரோஜா பூங்கா மாறியுள்ளது.
இந்த ஆண்டு பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக, சுமார் 30,000 ரோஜா மற்றும் கிரைசாந்திமம் (சாமந்தி) மலர்களைக் கொண்டு கார்ட்டூன் முயல், டால்பின்கள், இதய வடிவம் மற்றும் செல்ஃபி பாயிண்ட்டுகள் போன்ற அழகிய மலர்ச் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் இவற்றை ஆவலோடு கண்டு ரசிப்பதுடன், அவற்றின் அருகில் நின்று புகைப்படங்களையும் எடுத்து மகிழ்கின்றனர்.
மேலும், ஊட்டியைப் போலவே அடுத்த ஆண்டு முதல் கொடைக்கானல் ரோஜா பூங்காவிலும் பிரத்யேகமாக ‘ரோஜா கண்காட்சி’ நடத்துவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கொடைக்கானலில் 128-வது மலர்க்கண்காட்சி!

