டிட்வா புயல் வலுவடைந்துவரும் நிலையில், நாளை சென்னை முதல் டெல்டா மாவட்டங்கள் வரை அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாளை (30 நவம்பர்) அதிகாலையில் வடதமிழகம்-புதுவை-தெற்கு ஆந்திர கடலோரத்துக்கு வெறும் 50 கி.மீ. தொலைவுக்கே வந்துவிடும். மாலைக்குள் இன்னும் நெருங்கி 25 கி.மீ. தொலைவில் நிலைகொள்ளும்.
இன்று (29 நவம்பர்) தமிழகம் முழுவதும் இடி-மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஆனால் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுவை, காரைக்கால் போன்ற டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும். ஓரிரு இடங்களில் அதி கனமழையும் கொட்டித் தீர்க்க வாய்ப்பிருக்கு.
காற்றும் ஜோராக அடிக்கும். டெல்டா பகுதிகளில் 70-80 கி.மீ. வேகம், சில நேரங்களில் 90 கி.மீ. வரை வீசும். மற்ற கடலோர மாவட்டங்களில் 55-65 கி.மீ., இடையிடையே 75 கி.மீ. வரை காற்று வீசும்.
நாளை (30 நவம்பர்) வடதமிழகத்தில் பரவலாக மழை தொடரும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும். திருவள்ளூர்-ராணிப்பேட்டை பகுதிகளில் ஓரிடத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கு. காற்று வேகம் கடலோரத்தில் 55-70 கி.மீ., சில இடங்களில் 80 கி.மீ. வரை இருக்கும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் முழுவதும் மேகமூட்டமாகவே இருக்கும். நகரின் பல இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
மீனவர்கள் கவனத்துக்கு: தமிழகம்-புதுவை கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் நாளை காலை வரை சூறாவளிக் காற்று 70-80 கி.மீ. வேகத்தில் வீசும், இடையே 90 கி.மீ. வரை போகும். கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கண்டிப்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எல்லோரும் பாதுகாப்பாக இருங்க, தேவையில்லாம வெளியே போகாதீங்க, அரசு மற்றும் வானிலை மைய அறிவிப்புகளை உடனுக்குடன் பார்த்துக்கோங்க!

