வயநாடு நிலச்சரிவு பலி 90 ஐ தாண்டியது… மீட்பு பணியில் சிக்கல்… உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு!

wayanad 1200

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஐ கடந்துள்ளதாகவும், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

மீட்பு பணியில் சிக்கல்

நிலச்சரிவால் வயநாட்டின் சூரல்மலா பகுதியில் மட்டும் 400 குடும்பங்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அட்டமலா – முண்டக்கையை இணைக்கும் ஒரே பாலம் வெள்ளம், நிலச்சரிவில் சேதமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் காயமடைந்தோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. பல நூறு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது. அட்டமலா, நூல்புழா, முண்டக்கை, அட்டமலா பகுதிகள் பெரும் பாதிப்புகளை சந்தித்தப் பகுதிகளாக உள்ளன. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாலும், மழை மற்றும் கடினமான நிலப்பரப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதி முழுவதையும் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்களால் சென்றடைய முடியாமல் போனதாலும், நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது என்றும், இதுவரை 70 க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கேரள மாநில தலைமைச் செயலாளர் டாக்டர் வி வேணு தெரிவித்துள்ளார்.

உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு

இந்த நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட மு.க. ஸ்டாலின், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை தமிழக அரசின் சார்பில் வழங்க தயாராக இருப்பதாக பினராயி விஜயனிடம் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழகத்தில் இருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ரூ. 5 கோடி நிவாரண நிதி

அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாயினை வழங்கிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இருந்து அனுப்பப்படவுள்ள மீட்புக் குழிவில் தீயணைப்புத் துறையிலிருந்து 20 தீயணைப்பு வீரர்கள் ஒரு இணை இயக்குநர் தலைமையிலும், 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய ஒரு மருத்துவக் குழுவினரும் கேரள அரசுடன் மீட்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைப் பணிகளில் இணைந்து பணியாற்றுவார்கள். இந்தக் குழுவானது இன்றே கேரளாவிற்கு புறப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

→ grow your audience effortlessly.