திமுக-வின் தொடர் வெற்றி… முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொன்ன ரகசியம்!

Stalin 1200 speech

ரசு சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இந்த திட்டத்தின் பயன் கிராமப்புற மக்களுக்கு கிடைக்கும் வகையில், இன்று தருமபுரி மாவட்டம், பாளையம் புதூர் ஊராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சமீபத்திய நாடாளுமன்ற தேர்தல் வரையிலான திமுக-வின் தொடர் வெற்றிக்கான காரணம் என்ன என்பதை விளக்கினார். ”

‘மக்களிடம் செல்… மக்களுக்காகச் செயல்படு’

இது தொடர்பாக அவர் பேசுகையில், “ ‘மக்களிடம் செல் – மக்களைப் பற்றி அறிந்து கொள் – மக்களுக்காகச் செயல்படு!’ இதுதான் பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் எங்களுக்கு சொன்னது.இதுதான், அவர்கள் எங்களுக்கு அமைத்துக் கொடுத்த பாதை! வழிகாட்டு நெறிமுறை. அந்த அடிப்படையில்தான், ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதன் பலனை மக்கள் எனக்கு எழுதும் கடிதங்கள் மூலமாக, நேரடியாக அவர்களை சந்தித்து பேசும் பொழுதும் நான் உணர்கிறேன்.

பெரிய பெரிய திட்டங்களை, மாவட்டத்திற்கு தேவையானவற்றை திட்டமிட்டு செய்து தருகிறோம். பொதுமக்களின் தனிப்பட்ட கோரிக்கைகளையும் கேட்டு, செயல்படுத்தி கொடுப்பது மூலமாக, எல்லோரும் மனநிறைவு அடையும் ஆட்சியாக நம்முடைய கழக அரசு செயல்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக ஒவ்வொரு வீட்டிற்கும், ஏதாவது ஒரு பயன்கிடைக்க அதில் அவர்கள் பயனடைந்து கொண்டு வருகிறார்கள். அதேபோன்று ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலமாக ‘யாருக்கும் எந்தக் குறையும் இல்லை’என்ற நிலையை உருவாக்க நாங்கள் இப்போது பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

‘ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை’

இப்படி மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. அதனால்தான், அவதூறுகள் பொய்ப் பிரச்சாரங்கள் மூலமாக இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள். வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து மக்களுக்குமான அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம்!

ஆனால், இதே பெருந்தன்மையை மற்றவர்களிடம் பார்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் தொடர் தோல்வி, படுதோல்வி அடைந்த பிறகும் அதிலிருந்து ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களுக்கு கூட நிதி ஒதுக்க ஒன்றிய அரசுக்கு மனமில்லை. நல்ல குணமில்லை. பாடம் கற்றுக்கொள்வதற்கு நினைப்பும் இல்லை. தங்களின் பத்து வருட காலத்தில் தமிழ்நாட்டில் எந்த ஒரு பெரிய திட்டமும் செய்யவில்லை.

தொடர் வெற்றியின் ரகசியம்

ஒன்றிய அரசு என்பது, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாக செயல்பட வேண்டும் என்பதை இனியாவது அவர்கள் உணர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள். இதுதான் எங்களுடைய வெற்றியின் ரகசியம்!

இதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ரகசியம்! மக்களுக்கு உண்மையாக இருந்து, உண்மையான வளர்ச்சியை உருவாக்குவோம்! இந்தியாவின் முதன்மை மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாட்டை உன்னதமான சிறந்த மாநிலமாக உருவாக்கிக் காட்டுவோம், உருவாக்கிக் காட்டுவோம் ” என மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

茶?. ip cam 解決方案. Top 10 smartphones under ₹20,000 : best value for your money !.