‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி… ஜூலை 15 முதல் இரண்டாம் கட்ட முகாம்!

makkaludan muthalvar 1200

மிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தொடங்கிய பல்வேறு முக்கிய திட்டங்களில் ஒன்று ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம். கடந்த 2023 டிசம்பர் 18 ஆம் தேதி அன்று கோவை மாநகரில் இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக நகர்ப்புர உள்ளாட்சிகளுக்கு தொடங்கி வைக்கப்பட்டது.

இதன்மூலம் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் முக்கியத் துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளைப் பெற அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

ஐந்து மாதங்களில் 2,058 முகாம்கள்

இந்த நிலையில், கடந்த ஐந்து மாதங்களில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாநகராட்சிகளில் 641 முகாம்கள், நகராட்சிகளில் 632 முகாம்கள், பேரூராட்சிகளில் 520 முகாம்கள், புறநகர்ப் பகுதிகளில் 265 முகாம்கள் என ஏறத்தாழ ஒரு வார்டுக்கு ஒரு முகாம் வீதம் மொத்தம் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் முக்கியமான 13 துறைகள் மூலம் 44 சேவைகள் குறித்தும், முன்னதாக குறிப்பிடப்படாத சேவைகள் குறித்தும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

நகர்ப்புர உள்ளாட்சிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 2 லட்சத்து 64,000 மனுக்களும், பிற சேவைகள் மூலம் பெறப்பட்ட 6 லட்சத்து 40,000 மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் 8 லட்சத்து 74,000 மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட்டுள்ளது.

ஜூலை 15 முதல் இரண்டாம் கட்ட முகாம்

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் முதற்கட்ட வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இந்த திட்டம் குறித்த சிறப்பு முகாம்களை, வரும் ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்திடவும், இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15க்குள் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த இரண்டாம் கட்டத்தில், 15 துறைகள் சார்ந்த மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும்.மொத்தம் 37 மாவட்டங்களில் உள்ள 388 ஒன்றியங்களில் அடங்கியுள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் ஏறத்தாழ 2,500 முகாம்கள் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. 5 ஊராட்சிகளை இணைத்து ஏறத்தாழ 20,000 மக்களுக்கு ஒரு சிறப்பு முகாம் வீதம் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களைப் பதிவு செய்திட துறை வாரியாக அறைகள் அமைக்கப்படும். அனைத்து மனுக்களும் முதலமைச்சரின் முகவரி என்னும் வளைதளத்தில் பதிவு செய்யப்படும்.

எஸ்.எம்.எஸ் மூலம் ஒப்புகை

அனைத்து சிறப்பு முகாம்களிலும் ஒரு பிரத்யேக இ-சேவை மையமும் ஏற்படுத்தப்பட்டு, பதிவேற்றப்படும் மனுக்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் ஒப்புகை அனுப்பப்படும். இந்த முகாம்கள் நடைபெறுவது குறித்து குறும்படம் தயார் செய்யப்பட்டு உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரை மூலம் விளம்பரங்கள் செய்யப்படும்.

மேலும், பொதுமக்கள் மனுக்களுக்கு உரிய முறையில் தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். எனவே தங்கள் பகுதிகளில் நடைபெறக்கூடிய ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் காணுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

→ grow your audience effortlessly. Just a moment.... heavy equipment transport ventura ca.