கலைஞர் உலகம் அருங்காட்சியகம்: எப்போது பார்ப்பது? எப்படிப் பார்ப்பது?

WhatsApp Image 2024-03-04 at 17.32.16


சென்னை, மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு, கடந்த 26 ஆம்தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் அந்த நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நினைவிட வளாகத்தில், கருணாநிதியின் கலை, இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களுடன் பல்வேறு அரங்கங்களுடன் “கலைஞர் உலகம்” என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தில், கலைஞரின் நிழலோவியங்கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒரு புகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலைஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் ஆகிய அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கலைஞர் உலக அருங்காட்சியகத்தை, நாளை மறுநாள் புதன்கிழமை முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிடுவதற்குத் தமிழ்நாடு அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரி (Webportal) உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணைய முகவரியில், பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனுதிச் சீட்டு இலவசம்தான்.ஒருவர் ஒரு அலைபேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ளலாம். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் வருபவர்களுக்கு, நிலவறையிலுள்ள கலைஞர் உலகத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தைத் தேர்வுசெய்து, முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள், காட்சி நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன் வந்து விட வேண்டும். ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்வையிட, ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *