Amazing Tamilnadu – Tamil News Updates

பெண் பயணிகள் பாதுகாப்பு: ரயில்வே காவல்துறை புதிய திட்டம்!

பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில் நிலையங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கவும், சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவும் ரயில்வே காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை திருப்பதி விரைவு ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டு ரயிலில் இருந்து கீழே தள்ளி விடப்பட்ட சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவங்கள் நடைபெற்றன.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து இரவு 10 மணிக்கு மேல் புறப்படக்கூடிய ரயில்களில் ரயில்வே காவல் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

மேலும், ரயில் நிலையத்தில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மகளிர் பெட்டியில் பெண் காவலர்களை கூடுதலாக நியமிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் ரயில்வே அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா

சென்னையில் 23 ரயில்வே காவல் நிலையங்கள், நான்கு புறநகர் ரயில் நிலையங்கள் என மொத்தம் 900 காவலர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது காவல் ஆய்வாளர் உட்பட சுமார் 700 பேர் பணியாற்றி வருகின்றனர். 200 பேர் தேவைப்படும் நிலையில் ஒட்டு மொத்தமாக 500 காவலர்களை கூடுதலாக பணியமர்த்த வேண்டும்.

ரயில்வே காவல் நிலையங்களில் குறைந்தபட்சம் 50 உதவி காவல் ஆய்வாளர்களை பணியமர்த்த வேண்டும். சென்னை சென்ட்ரல் தாம்பரம், செங்கல்பட்டு, எழும்பூர், காட்பாடி, உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் குழு

மேலும், மற்றொரு புதிய திட்டமாக ‘ரயில்களில் பெண் பயணிகள் பாதுகாப்பு குழு’ என்ற வாட்ஸ்அப் குழு ஒன்றையும் உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கமாக ரயிலில் பெண் பயணிகள், மாதாந்திர டிக்கெட் எடுத்து பயணிக்கும் பெண்கள் மட்டுமின்றி ரயில்வே காவல் துறையினர், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளும் பயணம் செய்கிறார்கள். அவர்களை உள்ளடக்கிய வாட்ஸ்அப் குழு பெண் பயணிகள் அவசர உதவிக்கு பயன்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version