திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஆண்டார்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 418 கோடியே 15 லட்சத்து 24,000 ரூபாய் செலவிலான 6760 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
மேலும் 390 கோடியே 74 லட்சத்து 40,000 ரூபாய் மதிப்பீட்டிலான 7369 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 357 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,02,531 பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டத்தில் தமது தலைமையிலான அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பட்டியலிட்டு, அம்மாவட்டத்திற்கான மேலும் 5 புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
5 புதிய திட்டங்கள்
“கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், தண்டலம் – கசவநல்லாத்தூர் சாலையில், கூவம் ஆற்றின் குறுக்கே 20 கோடியே 37 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும்.
திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், மணவூர் – இலட்சுமி விலாசபுரம் சாலையில், கொசஸ்தலையாறு ஆற்றின் குறுக்கே, 23 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், காக்களூர் ஊராட்சியில், தாமரைக்குளம் மேம்படுத்தும் பணிகள், காக்களூர் ஏரி மேம்படுத்தும் பணிகள் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் அது மேற்கொள்ளப்படும்.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய உப்புத்தர நில ஏரியான பழவேற்காடு ஏரி, பறவைகளுக்கான முக்கிய வாழ்விடமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த ஏரிப் பகுதியில், சூழலியல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், இங்கே இருக்கின்ற வைரவன்குப்பம் மீனவ கிராமத்தில், மீனவர்களின் பயன்பாட்டுக்காக வலை பின்னும் கூடம் அமைத்துத் தரப்படும்.
வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கின்ற திருமழிசை – ஊத்துக்கோட்டை சாலையில், 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்” ஆகிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.