ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு… காப்புரிமை பதிவில் தமிழகம் முதலிடம்!

தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பிக்க உதவுவதற்காக மாநிலம் முழுவதும் 40 அறிவுசார் சொத்துரிமை பிரிவுகள் இயங்கி வருகின்றன.
கலை, அறிவியல் மாணவர்கள் மற்றும் பொறியியல் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கவும், அவர்களைத் தொழில்முனைவோராக உருவாக்கவும் இந்த பிரிவுகள் உதவி செய்கின்றன. படித்து முடிக்கும் மாணவர்களை வேலை தேடுவோராக இல்லாமல், பலருக்கு வேலை வழங்கக் கூடியவர்களாக அவர்களை உருவாக்கும் பணியை அறிவியல் தொழில்நுட்ப மன்றம் மேற்கொண்டு வருகின்றன.
மேலும், புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவதுடன் அவற்றை பொருட்களாக மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு தேவையான உதவிகளையும் அது செய்து வருகிறது. இதன் மூலம், சமூக பொருளாதார மாற்றம் ஏற்படும். கடந்த 2023 ஆம் ஆண்டு ஆய்வின்படி, அகில இந்திய அளவில் அறிவுசார் சொத்துரிமை பதிவில் தமிழகம் முதலிடத்திலும், மகாராஷ்டிரா 2 ஆம் இடத்திலும் உள்ளது.
தமிழகத்தில் காப்புரிமை கோரி 7,500 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. அதேபோல் புவிசார் குறியீடு பெறுவதிலும் தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது. காப்புரிமை பெறப்பட்ட கண்டுபிடிப்புகளைச் சந்தைப்படுத்துவது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் மற்றும் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்துடன் இணைந்து புதிய திட்டத்தை அறிவியல் தொழில்நுட்ப மன்றம் செயல்படுத்த உள்ளது. கண்டுபிடிப்புகள், ஆய்வக நிலையைத் தாண்டி, தொழிற்சாலை நிலைக்கு வந்து பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்.
அந்த வகையில், ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மாநில தொழில்நுட்ப மன்றம் சார்பில், ஆண்டுதோறும் 1,000 ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, நிதியுதவி கோரி 16,000 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1,000 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ.10,000 ஆராய்ச்சி நிதியாக வழங்கப்படு்ம் எனத் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் – செயலர் எஸ்.வின்சென்ட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழ்நாட்டில் புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் புவிசார் குறியீடுகள் தொடர்பாக, அறிவுசார் சொத்துரிமை பிரிவு ஒருங்கிணைப்பாளர்களின் ஆய்வுக் கூட்டம், சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தில் கடந்த 2 நாட்ளாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.