மகளிர் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழா’வில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக, நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில், சுய உதவிக் குழு பெண்கள், தாங்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்” என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில், முதலமைச்சரின் இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் மூலம் விரைவு போக்குவரத்துக் கழகம் தவிர அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் நிலையான இயக்க நடைமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, “தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு அடையாள அட்டை வைத்திருக்கும் பெண்கள், ஏசி பேருந்துகளை தவிர்த்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 25 கிலோ வரை தயாரிப்பு பொருட்களை கட்டணமின்றி எடுத்த செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்
சாதாரண கட்டண புறநகர் பேருந்துகளில் 100 கிமீ வரை கட்டணமின்றி பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்படும். இதற்காக சுய உதவிக்குழு பெண் பயணிகளுக்கு ‘கட்டணமில்லா சுமை பயணச்சீட்டை’ நடத்துநர் வழங்க வேண்டும். மேலும் தயாரிப்பு பொருட்களை கொண்டு வரும் சுய உதவிக்குழு மகளிரிடம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் கனிவாக நடந்து கொள்வதுடன், பொருட்களை ஏற்றி, இறக்க போதுமான நேரத்தையும் வழங்கி, பேருந்துகளை நிறுத்தி இயக்க வேண்டும். அதேநேரம் மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிக இடத்தை ஆக்கிரமிக்கும் பெரிய சுமைகளையும், ஈரமான சுமைகளையும் அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக பயணி இல்லாமல் பொருட்களை ஏற்றக்கூடாது.

பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தொகையை அரசு திருப்பி வழங்குவதை போல, ‘கட்டணமில்லா சுமை பயணச்சீட்டில்’ நகர பேருந்துகளுக்கு ரூ.16, புறநகர் பேருந்துகளுக்கு ரூ.45 வீதம் கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் கழகங்கள், துறைக்கு சமர்பிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட அணைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.