தமிழக அமைச்சரவை நாளை மாற்றம்? – உயர் கல்வித் துறைக்கு சர்ப்ரைஸ்!

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை நாளை மாற்றியமைக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட இருப்பதகாவும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாகவே செய்திகள் பரபரத்தன. ஆனாலும், சில காரணங்களால் அது தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. குறிப்பாக செந்தில் பாலாஜியின் ஜாமீன் தீர்ப்பை எதிர்பார்த்தே அமைச்சரவை மாற்றம் தாமதமானதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாலும், அவர் மீண்டும் அமைச்சர் ஆவதில் தடை ஏதும் இல்லை என்பதாலும்,
பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் நாளை பிற்பகல் 3.30 க்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உள்ளே, வெளியே யார்?

இதில் எதிர்பார்க்கப்பட்டபடியே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகவும், செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், சேலம் ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட இருப்பதாகவும், அதே சமயம் ரகுபதி, செஞ்சி மஸ்தான் மற்றும் மதிவேந்தன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் உதயநிதியை இன்று சந்தித்த செந்தில் பாலாஜி

இதில் செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை மீண்டும் வழங்கப்படலாம் என்று முன்னர் கூறப்பட்டாலும், அவர் வேறு முக்கிய இலாகாவை, குறிப்பாக அமைச்சர் எ.வ. வேலு வசம் இருக்கும் பொதுப்பணித் துறையை கோரி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம், உதயநிதி துணை முதலமைச்சர் ஆவதால், அவருக்கு மூத்த அமைச்சர்களின் சில இலாகாக்கள் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.

ஆனால், ” ‘அப்படி யாருடைய துறையையும் பறித்து எனக்கு கூடுதலாக எந்தத் துறையும் வேண்டாம். இப்போதிருக்கும் விளையாட்டுத் துறையே போதும்’ என்று உதயநிதி சொல்லிவிட்டார். எனவே, மூத்த அமைச்சர்களின் இலாகாக்கள் எதுவும் பறிக்கப்பட வாய்ப்பில்லை” என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தனது சமூக வலைதள பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

காத்திருக்கும் சர்ப்ரைஸ்

கூடவே உயர் கல்வித் துறை அமைச்சராக பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

அப்படி இந்த நியமனம் நடந்தால், அது நிச்சயம் சர்ப்ரைஸான ஒன்றாக தான் இருக்கும். அமைச்சரவையில் எப்போதும் பட்டியல் இனத்தவருக்கு முக்கியத்துவம் இல்லாத இலாகாக்களே வழங்கப்படுவதாக சமீப காலமாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. மேலும், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சமீபத்தில் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிக்கும் பங்கு வேண்டும் என்று பதிவிட்டதும், அவரது கட்சியைச் சேர்ந்த துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால் என்ன என்று கேட்டு அண்மையில் அளித்த பேட்டியும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை கருத்தில்கொண்டும், பட்டியல் இன மக்களுக்கு திமுக எப்போதுமே ஆதரவான கட்சிதான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே திமுக மேலிடம் இந்த முடிவை மேற்கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

உயர் கல்வித் துறை இலாகா தற்போது அமைச்சர் பொன்முடி வசம் உள்ளது. அப்படி அந்த இலாகா அவரிடமிருந்து நீக்கப்பட்டால், அதற்குப் பதிலாக அவருக்கு வேறு ஒரு நல்ல இலாகா ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ultimate guide : how to change your app recommendation settings in windows 11 and windows 10. Meet marry murder. dprd kota batam.