தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சனிக்கிழமையன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி 19 மாவட்டங்களில் மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இலேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் எதுவும் இல்லாமல், குறைந்த வெப்ப நிலையே காணப்படுகிறது.
முடிவுக்கு வரும் கோடை காலம்… சென்னைக்கு மழை வாய்ப்பு
இதனிடையே கோடை காலம் முடிவுக்கு வருகிறது என்றும் தமிழகத்தில் இனி வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “கோடை காலம் இன்றுடன் முடிகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் மழைக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தமிழகத்திற்கு இந்த ஆண்டு தனித்துவமான ஆண்டுகளில் ஒன்று என்றே சொல்லலாம். இந்த ஆண்டு தமிழகத்தில் அதிக வெப்ப அலை இல்லை. அது போல் இந்த மே மாதத்தில் சென்னையிலும் வெயிலானது ஒரு நாள் கூட 40 டிகிரி சென்டிகிரேட்டை தாண்டவில்லை.
இதே நிலைதான் கடந்த 25 ஆண்டுகளில் 2022, 2018, 2004 ஆகிய ஆண்டுகளில் இருந்தது. வெப்பநிலை பொதுவாக இது போன்ற வெப்பநிலை இல்லாமை என்பது மே மாதம் இறுதியிலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ இருக்கும். ஆனால் தற்போது மே மத்தியிலேயே இருப்பது இதுதான் முதல் முறை. இதனால் குறைந்த காற்றழுத்தத்தை ஏற்படுத்தும்.
எனவே இந்த மாத இறுதியில் அரபிக் கடல், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளது. அடுத்த 10 நாட்களில் அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாகிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு- மேற்கு பகுதியில் காற்று சுழற்சியானது வடதமிழகம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு கடலோரங்களில் நெருங்கி வருகிறது. எனவே இனி வரும் நாட்கள் வெப்பமில்லாமல் ஜாலியான நாட்களாக அமையும். வழக்கத்தை விட இந்த ஆண்டு மே மாதம் வெப்பநிலை குறைவாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.