பள்ளித் தேர்வு தேதிகள் மாற்றம்… முன்கூட்டிய தொடங்கும் கோடை விடுமுறை!

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. 10 ஆம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 28 ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல், 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 9-ல் தொடங்கி 21 ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் கோடை வெயில் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது. இதனால் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு மட்டும் இறுதி பருவத் தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க வேண்டுமென பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன. இதுதொடர்பாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு தேதிகளை மாற்றி திருத்தப்பட்ட கால அட்டவணையை தமிழக தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 ஆம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 7 ல் தொடங்கி 17 ஆம் தேதி உடன் முடிவடைய உள்ளன. ஒவ்வொரு வகுப்புக்கும் பாடவாரியாக தேர்வு நடைபெறும் விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டவணையை பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களின்படி தேர்வுகளை நடத்தி முடிக்க அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை
கோடை விடுமுறை 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதேபோன்று 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்துக்குள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை வெயிலின் தாக்கம் தொடரும் பட்சத்தில் பள்ளி திறப்பு தாமதமாகலாம்.