Amazing Tamilnadu – Tamil News Updates

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது… வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?

மிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்கள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு தொடங்கும், 5 ஆம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு தொடங்கும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கெனவே அறிவித்து இருந்தது.

அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கு பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையும் செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று காலை பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. தமிழகம் புதுச்சேரியில் 7,518 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 21,057 மாணவ மாணவியர் இந்த தேர்வில் பங்கேற்றுள்ளனர். மேற்கண்டவர்களில் 3 லட்சத்து 78, 545 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 24 ,023 பேர் மாணவியர். சிறைவாசிகள் 145 பேரும் எழுதுகின்றனர்.

இதற்காக தமிழகம், புதுச்சேரியில் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வறைக் கண்காணிப்பு பணியில் 43, 446 ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 4,470 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் 20,476 மாற்றுத் திறன் கொண்ட மாணவ மாணவியருக்கு மொழிப்பாடத் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தேர்வை எழுத ஒரு மணி நேரம் கூடுதல் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 25 ஆம் தேதி தேர்வு முடிவடைகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள்

தேர்வு எழுத வரும் மாணவர்கள் எலெக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவ மாணவியர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், அடுத்த சில ஆண்டுகள் தேர்வு எழுத முடியாத வகையில் தண்டனைகளும் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

இன்று தேர்வு தொடங்கியதை அடுத்து, தடையில்லா மின்சாரம் வழங்க மின்சாரத் துறைக்கும், தேர்வுப்பணிகளுக்கு பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவுரைகளை பள்ளிக் கல்வித்துறையும், தேர்வுத்துறையும் வழங்கியுள்ளன.

தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 10 மணிக்கு தேர்வு அறைக்குள் வந்ததும் விடைத்தாள் வழங்கப்படும். அதன் முகப்பு பக்கத்தில் மாணவர்கள் தங்கள் விவரங்களை எழுதும் வகையில் 5 நிமிட நேரம் வழங்கப்படும். பின்னர் கேள்வித்தாள் வழங்கப்படும். கேள்வித்தாள் படித்துப்பார்க்க 10 நிமிட நேரம் ஒதுக்கப்படும்.

மாணவர்கள், பொதுமக்கள் தேர்வு தொடர்பான தங்கள் புகார்கள் மற்றும் கருத்துகளையும், சந்தேகங்களையும் தெரிவிக்க வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேர தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். புகார்கள் தெரிவிக்க விரும்புவோர், 9498383075, 9498383076 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

Exit mobile version