விண்வெளியில் 9 மாதம்… பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்… உடல் நிலை பாதிப்பும் சம்பளமும்!

அமெரிக்காவின் போயிங் நிறுவனம், ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை தயாரித்தது. புதிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி விண்வெளி நிலையத்துக்குச் சென்றனர்.
வெறும் 8 நாட்களிலேயே பூமிக்கு திரும்ப திட்டமிட்டே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இன்றி வெறுமையாக பூமிக்கு திரும்பியது.
இந்த நிலையில், இவர்களை அழைத்து வருவதற்காக கடந்த மார்ச் 14 ஆம் தேதியன்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆனி மெக்லைன், நிகோல் அயர்ஸ், ஜப்பானை சேர்ந்த டகுயா ஒனிஷி, ரஷ்யாவை சேர்ந்த கிரிஸ் பெஸ்கோஸ் ஆகியோர், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) புறப்பட்டனர்.
அமெரிக்காவின் புளாரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட டிராகன் விண்கலம் சனிக்கிழமையன்று ஐஎஸ்எஸ் நிலையத்தில் வெற்றிகரமாக இணைந்தது. பூமியில் இருந்து புதிதாக வந்த 4 விண்வெளி வீரர்களை, ஐஎஸ்எஸ் நிலையத்தில் ஏற்கெனவே தங்கியிருக்கும் சுனிதா உள்ளிட்ட 7 வீரர்களும் வரவேற்றனர். இந்த நிலையில், புதிய வீரர்களிடம் பணிகளை ஒப்படைத்துவிட்டு சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷிய விண்வெளி வீரர் ஆகியோர் திங்களன்று பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாசா விண்வெளி அமைப்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மார்ச் 19 ஆம் தேதி ஐஎஸ்எஸ் நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் அமெரிக்காவை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் உள்ளூர் நேரப்படி மாலை 5.57 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி மார்ச் 19 ஆம் தேதி அதிகாலை 3.27 மணிக்கு ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளனர். வானிலையை பொறுத்து தேதி மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
உடல் நிலையில் ஏற்படும் தாக்கம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கு மேலாக தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் இதர வீரர்கள் பூமிக்கு திரும்பியதும் அவர்களுக்கு பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்படும்.
விண்வெளியில் தங்கியிருந்ததால் அவர்களின் எலும்புகள், தசைநார்கள் பலவீனம் அடைந்திருக்கும். அவர்களின் தோல், குழந்தைகளின் தோல் போன்று மிகவும் மென்மையாக மாறியிருக்கும். கண்பார்வை திறன் பாதிக்கப்பட்டு இருக்கும். கதிரியக்க பாதிப்பு காரணமாக செல்கள், ரத்த அணுக்களும் பாதிக்கப்பட்டிருக்கும்.
பூமிக்கு திரும்பியதும் அவர்களுக்கு தலைவலி, தலைசுற்றல், வாந்தி ஏற்படும். எலும்பு, தசைநார்கள் பலவீனம் அடைந்திருப்பதால் அவர்களால் தரையில் கால் ஊன்றி நடக்க முடியாது. சுமார் 3 மாதங்கள் முதல் ஓராண்டுக்கு பிறகே சுனிதா உள்ளிட்டோர் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள்.

நாசா வெளியிட்டுள்ள தகவலின் படி, விண்வெளி வீரர்கள் முக்கியமாக மூன்று வகையான கதிர்வீச்சுகளுக்கு ஆளாகிறார்கள். இவற்றில் பூமியின் காந்தப்புலத்தில் சிக்கியுள்ள துகள்கள், சூரியனில் இருந்து வரும் சூரிய காந்தத் துகள்கள் மற்றும் விண்மீன் அண்டக் கதிர்கள் ஆகியவை அடங்கும்.
இதனால், பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவருக்கும் அடுத்த பல மாதங்கள் மிகுந்த போராட்டமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
சம்பளம்
நாசாவின் சம்பள பட்டியலில் ஜிஎஸ்-15 கிரேடில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளார். இதன்படி அவருக்கு ஓராண்டில் ரூ.1.41 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்கள் தங்கிருந்ததற்காக ரூ.1.05 கோடி, இதர படிகள் வகையில் ரூ.1.06 கோடி அவருக்கு கிடைக்கும் என்று நாசா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.