நாகை மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை … முதல்வர் வெளியிட்ட 6 முக்கிய அறிவிப்புகள்!

நாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 139 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் 35 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 82 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 206 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் 38,956 பயனாளிகளுக்கு, 200 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மேலும், நாகை அவுரி திடலில் 105 புதிய பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாகை மாவட்டத்துக்கு 6 முக்கிய அறிவிப்புகள்
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தென்னடார் பகுதியில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்பது உட்பட நாகை மாவட்டத்துக்கான பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மிக முக்கியமாக,
வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், தென்னடார் பகுதியில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
காவிரி டெல்டா பகுதியில் அனுமதிக்கத்தக்க, வேலைவாய்ப்புகள் அளிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்.
விழுந்தமாவடி, வானவன்மாதேவி, காமேஸ்வரம் ஆகிய மீனவ கிராமங்களில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.
தெற்கு பொய்கைநல்லூரிலும், கோடியக்கரையிலும் தலா ரூ.8.50 கோடி மதிப்பில் பல்நோக்கு பேரிடர் மையங்கள் கட்டப்படும்.
50 ஆண்டுகால பழமைவாய்ந்த நாகப்பட்டினம் நகராட்சிக் கட்டிடம் ரூ.4 கோடியில் புதுப்பிக்கப்படும்.

நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் பகுதியில் இருக்கும் பல்வேறு வடிகால்கள், வாய்க்கால்கள், மதகுகள், இயக்கு அணைகள் ரூ.32 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும்.
நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்
மேலும், ஹஜ் பயணம் மேற்கொள்ளும் புனித பயணிகளுக்காக நங்கநல்லூரில் ரூ.65 கோடி மதிப்பில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.