Amazing Tamilnadu – Tamil News Updates

MSME தொழில்முனைவோர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் … பயன்படுத்திக்கொள்வது எப்படி?

எம்எஸ்எம்இ (MSME) எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர்களிடையே தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்பட பல அரசு நிறுவனங்களிடமிருந்து பெறக்கூடிய தொழில்வாய்ப்புகள், கான்ட்ராக்ட்டுகள் குறித்து விரிவாக விளக்குவதற்காகவும், அவற்றை எப்படி பெறுவது, அவர்களுக்காக அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன என்பது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்குமான கருத்தரங்கு, ‘MSME-களுக்கான விற்பனையாளர் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற தலைப்பில் சென்னை, கிண்டியில் நடைபெற்றது.

இந்திய சிறுதொழில் சங்கங்களின் கூட்டமைப்பு ( FASII -Federation of Associations of Small Industries of India) மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் ( Airport authority of India) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், சுமார் 250 க்கும் அதிகமான தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர். மத்திய MSME அமைச்சகத்தின் இணை இயக்குநர் எஸ். சுரேஷ் பாபுஜி தலைமை வகிக்க, சென்னை விமான நிலையத்தின் இயக்குநர் சி.வி. தீபக் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.

கருத்தரங்கின் நோக்கம்

கருத்தரங்கில் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக உரையாற்றிய FASII தெற்கு மண்டலத்தின் மண்டல தலைவர் பி. கார்த்திகேயன், வாங்குபவருக்கும் ( Buyer) விற்பவருக்கும் ( Vendor) இடையே பொருத்தமற்ற சூழல் நிலவுவதால் அதை களைந்து, இருதரப்புக்குமிடையே இணைப்பை ஏற்படுத்துவது எப்படி என்ற நோக்கத்திலேயே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

விமான நிலையத்தில் கான்ட்ராக்ட் வாய்ப்புகள்

அவர் பேசுகையில், “ விமான நிலையத்தில் ஏராளமான சேர்களை வாங்குகிறார்கள். வழக்கமாக இங்கிருக்கும் முக்கால்வாசி ‘சேர்’ தயாரிப்பாளர்கள் சப் கான்ட்ராக்டருக்கோ அல்லது இன்னொருவருக்காகவோ தங்களது தயாரிப்புகளைக் கொடுப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். விமானநிலையம் போன்று நேரடி தேவை உள்ளவர்களுக்கு கொடுப்பதில்லை. இதுபோன்ற ஆர்டர்களை எடுக்கும் L1 கான்ட்ராக்ட் உரிமம் உள்ளவர்கள் டெல்லி, மும்பை போன்ற வெளி மாநிலங்களிலிருந்து வாங்கி, இங்கே லோக்கலில் இருப்பவர்கள் மூலம் சப்ளை செய்து இலாபம் ஈட்டுகிறார்கள். எனவே இது குறித்த விழிப்புணர்வு தேவை.

பி. கார்த்திகேயன்

விமான நிலையத்தில் ஏ.சி கான்ட்ராக்ட் மட்டுமே ஆண்டுக்கு 4 முதல் 5 கோடி ரூபாய் வரை இருக்கும். அதேபோன்று வாட்டர் பியூரிஃபையர் ரூ. 1 கோடி ரூபாய் அளவுக்கும் , ஜெனரேட்டர் பரமாரிப்பு 5 முதல் 7 கோடி ரூபாய் அளவிலும் ஆர்டர் கிடைக்கும். இதுபோன்ற வாய்ப்புகள் உள்ளது என்பதே அதிகம் பேருக்குத் தெரிவதில்லை. எடுத்த உடனேயே மெயின் கான்ட்ராக்டராக வரவேண்டும் என்பது அவசியமில்லை. சப் கான்ட்ராக்டராக கூட வரலாம். யார் L1 கான்ட்ராக்டை எடுத்துள்ளார்களோ அவர்களிடம் உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை எடுத்துக்கூறி, அந்த கான்ட்ராக்ட்டை எடுத்து செய்யலாம் அல்லது சப்ளை செய்யலாம். தொழிலில் டர்ன் ஓவர் முன்னேற்றம் அடைந்த பின்னர், நீங்களே கான்ட்ராக்டை நேரடியாக எடுத்துச் செய்யும் L1 நிலைக்கு மாறலாம்.

வெளிநாடு செல்ல இலவச பயணக் கட்டணம்

எம்எஸ் எம்இ தொழில்முனைவோர் தொழில் நிமித்தம் ஜாப் ஆர்டரை பெறுவதற்காக மேற்கொள்ளும் விமான பயணங்களுக்கான கட்டணத்தை அரசே தருகிறது. அதேபோன்று வெளிநாடுகளில் நடக்கும் தொழில் கண்காட்சியில் நீங்களும் அரங்குகள் அமைத்தால், அந்த அரங்கு அமைப்பதற்கான கட்டணங்களையும், உங்கள் தயாரிப்பு பொருட்களை அங்கே கொண்டு செல்வதற்கான சரக்கு கட்டணத்தையும் அரசே தருகிறது. இப்படி அரசே எல்லா உதவிகளையும் செய்து, உங்களை ஊக்குவிக்கிறது. ஆனால், இதுபோன்ற திட்டங்கள் இருப்பது தொழில்முனைவோர்களில் பலருக்குத் தெரிவதில்லை.

எஸ்.சி/ எஸ்.டி தொழில்முனைவோருக்கான சலுகைகள்

அதேபோன்று எஸ்.சி/ எஸ்.டி தொழில்முனைவோருக்கும் அதிக வாய்ப்புகள் வந்துள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால், அவர்களுக்காக தனி பிரிவையே உருவாக்கி கவனம் செலுத்துகிறார்கள். மேலும் முதல்முறை தொழில்முனைவோராக இருப்பவர்களுக்காகவும் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவர்கள் அரசு கான்ட்ராக்ட்டுகளை எடுப்பதற்கு முன் வைப்புத் தொகை செலுத்த (Earnest Money Deposit – EMD) செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு, வாய்ப்புகள் எளிதாக்கப்பட்டுள்ளன . ஆனால், இவையெல்லாம் அவர்களிடம் சென்று சேருவதில்லை. இதையெல்லாம் நீங்கள் தெரிந்துகொள்வதற்காக தான் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

பொதுத்துறை நிறுவனங்களில் பிசினஸ் வாய்ப்பு

சென்னையில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன என்பது குறித்து பலருக்குத் தெரிவதில்லை. அந்த நிறுவனங்களில் அதிக அளவில் தொழில்/வர்த்தகங்கள் நடைபெறுகின்றன. ஆவடியில் இருக்கும் மத்திய பாதுகாப்புத் துறையின் கனரக ஆயுத தளவாடதொழிற்சாலை, இன்ஜின் ஃபேக்டரி போன்றவை குறித்தும் பலருக்குத் தெரியவில்லை. அதேபோன்று சிபிசிஎல் ( சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) பிபிசிஎல், ( பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) போன்ற மத்திய அரசு நிறுவனங்களெல்லாம் இங்கு உள்ளன.

இங்கு பெரிய அளவில் பிசினஸ் உள்ளது. சென்னை, மணலி, தூத்துக்குடி போன்ற இடங்களிலும் பெரிய அளவில் எண்ணெ சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களெல்லாம் கான்ட்ராக்ட் உட்பட ஆண்டுக்கு குறைந்தது 1,000 கோடி ரூபாய் அளவுக்காவது Procurement (கொள்முதல்) செய்கின்றன. இந்த வாய்ப்புகளையும் எம்எஸ்எம்இ தொழில்முனைவோர்கள் பயன்படுத்தி பயன்பெறலாம்” எனத் தெரிவித்தார்.

Exit mobile version