மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு இலவச வீடு, சுயதொழில் கடன், வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி! – தமிழக அரசு வழங்கும் 11 உதவிகள்!

திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் 8,373 ஏக்கர் நிலப் பரப்பில் பரந்து விரிந்து காணப்படும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (பி.பி.டி.சி.எல்) என்ற நிறுவனம் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தது. குத்தகை காலம் 2028 வரை இருந்தாலும், வனத்துறையினரின் தொடர் அழுத்தம், பி.பி.டி.சி.எல் நிறுவனத்தின் தலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றம், குறைந்து போன தேயிலை விளைச்சல் உள்ளிட்ட சில காரணங்களால், குத்தகைக் காலத்துக்கு முன்னதாகவே வெளியேற முடிவு செய்துவிட்டது பி.பி.டி.சி.எல் நிறுவனம்.

இதில் பணியாற்றிவந்த 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுக்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுவிட்டது. விருப்ப ஓய்வுத் திட்டத்தை ஏற்பவர்களுக்கு அவர்களது வயதைப் பொறுத்து, ஒன்றே முக்கால் லட்சம் முதல் மூன்று லட்சம் வரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என எஸ்டேட் நிர்வாகம் அறிவித்தாலும், திடீரென எஸ்டேட்டை விட்டு வெளியேறச் சொன்னால், தங்களது எதிர்காலம் என்னவாகும் எனத் தொழிலாளர்கள் கலங்கிபோய் உள்ளனர்.

தமிழக அரசின் 11 உதவிகள்

இது தொடர்பாக தொழிலாளர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின்
உத்தரவின்பேரில், தொழிலாளர்கள் மறுவாழ்வுக்கான 11 உதவிகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.

கிராமப் பகுதிகளில் குடியேற விரும்பும் வீடற்ற தொழிலாளர்களுக்கு தற்போதைய அரசு விதிமுறைகளைத் தளர்வு செய்து சிறப்பினமாகக் கருதி அவர்களின் விருப்பத்தின் பேரில் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு தயார் நிலையிலுள்ள அம்பாசமுத்திரம் வட்டம், பாப்பாங்குளம் கிராமத்தில் 240 அடுக்கு மாடிவீடுகள் மற்றும் திருநெல்வேலி மாநகரம், ரெட்டியார்பட்டி பகுதியில் பணி முடிவடையும் நிலையிலுள்ள அடுக்குமாடி வீடுகள் ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் விருப்பமுள்ள, ஏற்கனவே வீடு இல்லாத மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி ஒதுக்கீடு செய்யப்படும்.

சுயதொழில் தொடங்க கடன்

தொழிலாளர்களில், 55 வயதிற்குட்பட்ட பட்டியல் இனத்தைச் சார்ந்த வாழ்வாதார வசதி தேவைப்படும் தொழிலாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் (AABCS) புதிய தொழில் தொடங்க 35% மானியம் மற்றும் 6% வட்டிச் சலுகையுடன் சுயதொழில் தொடங்க கடன் வழங்கப்படும்.

இதர பிரிவுகளைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் (NEEDS) கீழ் 25% மானியம் மற்றும் 3% வட்டி சலுகையுடன் அதிகபட்சமாக ரூ.75 இலட்சம் வரை சுயதொழில் தொடங்க கடன் வழங்கப்படும்.

வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி

தகுதியுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu Skill Development Corporation) மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மையம் (Tamil Nadu State Rural Livelihood Mission) மூலம் திறன் பயிற்சி வழங்கப்படும். திறன் பயிற்சி முடிப்பவர்களுக்கு தனியார் துறையில் உரிய வேலைவாய்ப்புப் பெற்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். சிறிய பால் பண்ணைகள் அமைத்தல், கறவை மாடுகள், ஆடுகள் வாங்குதல் ஆகியவற்றிற்காக ஆவின் நிறுவனம் மற்றும் கூட்டுறவுத் துறை மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.

பெண்களுக்கு சிறு கடன்கள்

பெண்களுக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ரூ.1.50 இலட்சம் வரை சிறு கடன்கள் வழங்கப்படும்.பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அவர்கள் விரும்பும் அரசுப் பள்ளியில் அவர்களைச் சேர்க்கவும், அரசு விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குடும்ப அட்டை, ஆதார் அட்டை

தொழிலாளர்கள் குடியேற விரும்பும் முகவரிக்கு அவர்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை சிறப்பு முகாம்கள் மூலம் சிரமமின்றி மாற்றம் செய்து தரப்படும். தொழிலாளர்களுக்கு நிறுவனம் வழங்க வேண்டிய மீதமுள்ள 75% கருணைத் தொகை நீதிமன்ற உத்தரவுபடி வழங்கிடவும், அவர்களுக்கு விதிப்படி வழங்கப்பட வேண்டிய மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ பலன்களும் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்திட தொழிலாளர் நலத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தகவலை தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், அவர்களுக்கான குடியிருப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2020 leroy agency press + direct news today + 1 news today broadcasting + erika leroy de saxe. Br450c ef stihl archives startekbv de bron van groene innovatie. Je resterais fidèle à ecoboisconfort par patrice h.