“அரசியலமைப்புதான் அனைத்தையும் விட உயர்ந்தது” – குடியரசுத் துணைத் தலைவருக்கு திமுக கண்டனம்!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வியாழக்கிழமையன்று விமர்சித்து பேசி இருந்தார். “இந்தியாவின் குடியரசுத் தலைவர் உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் இருக்கிறார். அவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுவது எங்கு கொண்டு செல்கிறது? இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல. அரசியலமைப்பின் 142 ஆவது பிரிவு, நீதித்துறையிடம் 24 மணி நேரமும் இருக்கும் ஒரு அணு ஆயுதமாகும். இது ஜனநாயக சக்திகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது” எனக் காட்டமாக கூறி இருந்தார்.
இந்த நிலையில், குடியரசுத் துணை தலைவர் ஜக்தீப் தன்கரின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக, “அரசியலமைப்புதான் அனைத்தையும் விட உயர்ந்தது” எனக் கூறி உள்ளது.
திமுக கண்டனம்

இது தொடர்பாக திமுக எம்.பி திருச்சி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலமைப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட அதிகாரங்களின் படி நிர்வாகம், சட்டமன்றம்/ நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் இம்மூன்று துறைகளும் அவரவர் துறைகளில் இயங்கினாலும் அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது.
ஆளுநர்கள் மற்றும் குடியரசுத்தலைவர்களின் பங்கு என்ன என்பது குறித்து உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்ட பிரிவு 142 ஐ பயன்படுத்தி சமீபத்தில் தெளிவு படுத்தி உள்ளது. அதில் அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளது.
இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த துணைக்குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை. இந்திய ஒன்றியத்தில் ‘சட்டத்தின் ஆட்சி’ தான் நடக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும்” என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.