சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் … முழு விவரம்!

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே நான்காவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதன் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் எழும்பூரிலிருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ” காரைக்குடியில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பல்லவன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12606) நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பகுதிநேரமாக தாம்பரம்-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
நெல்லை எக்ஸ்பிரஸ்
அதே போல, மன்னார்குடியில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16180) வருகிற 8 ஆம் தேதி பகுதிநேரமாக தாம்பரம்-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. நெல்லையில் இருந்து இரவு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (12632) 8 ஆம் தேதி பகுதி நேரமாக செங்கல்பட்டு-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், மண்டபத்தில் இருந்து மாலை 5.55 மற்றும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16752, 22662) பகுதி நேரமாக தாம்பரம்-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
முத்து நகர் எக்ஸ்பிரஸ்
தூத்துக்குடியில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயில் (12694) 8 ஆம் தேதி பகுதிநேரமாக மாம்பலம்-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், புதுச்சேரியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் பயணிகள் ரயில் பகுதி நேரமாக தாம்பரம்-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
வைகை எக்ஸ்பிரஸ்
எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12635) நாளை மற்றும் நாளை மறுநாள் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும்.
அதே போல, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12759) 9 ஆம் தேதி தாம்பரத்திற்குப் பதிலாக சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும். எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22661) 9 ஆம் தேதி எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்தில் இருந்து மாலை 6.15மணிக்கு புறப்படும். அதே தேதியில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி செல்லும் பயணிகள் ரயில், எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
ஆந்திர மாநிலம் காக்கி நாடா துறைமுக ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயில், (17644) 8 ஆம் தேதி கொருக்குப்பேட்டை, பெரம்பூர், அரக்கோணம், காஞ்சிபுரம் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் எழும்பூர், மாம்பலம், தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது. அதே தேதி யில், காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (17652) மேல்பாக்கம், காஞ்சிபுரம் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் அரக்கோணம். பெரம்பூர், எழும்பூர், மாம்பலம், தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது.
எழும்பூரில் இருந்து புறப்பட்டு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (20665), நாளை மற்றும் நாளை மறுநாள் 15 நிமிடங்கள் தாமதமாக எழும்பூரில் மதியம் 3 மணிக்கு புறப்படும்” எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.