பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மற்றொரு யூடியூபர் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பஞ்சாப் மாநிலத்தில் மற்றொரு யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஜான் மஹால்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த ஜஸ்பிர் சிங் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர். இவருக்கு பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2020 முதல் மூன்று முறை பாகிஸ்தான் சென்று வந்துள்ள இவர், முக்கிய தகவல்களை பகிர்ந்ததாக புகார் எழுந்துள்ளது. முன்னதாக, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஜோதி மல்கோத்ரா என்ற யூடியூபர் கைது செய்யப்பட்ட பிறகு, ஜஸ்பிர் சிங் தன்னிடம் இருந்த தகவல் தொடர்பு ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் தொடர்பில் இருந்ததாகவும், இந்தியாவின் ராணுவ ரகசியங்களை பகிர்ந்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஜஸ்பிர் சிங்கிற்கு முன்னதாக, ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்கோத்ரா உட்பட 11 பேர் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் இடையே மோதல் முடிந்து, பதற்றமான சூழல் நிலவும் நிலையில், உளவு பார்க்கும் நடவடிக்கைகளை தடுக்க அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் இது குறித்து மக்கள் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து, தேச பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தி வருகின்றனர்.