முதலமைச்சர் தொடங்கிய ‘நீங்கள் நலமா’ திட்டம்: ஏன், எதற்காக..?

மிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், அவர் தொடங்கி வைத்த பல்வேறு புதிய திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், அவர் இன்று தொடங்கி வைத்துள்ள ‘நீங்கள் நலமா’ திட்டம், இதற்கு முன்னர் தொடங்கப்பட்ட திட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.

முந்தைய திட்டங்களால் கோடிக்கணக்கானோர் பயன்

மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர் தொடங்கப்பட்ட மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், ஒலிம்பிக் தேடல், நான் முதல்வன் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதலமைச்சர் எனப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அதனால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் அது ஒவ்வொரு குடும்பத்தையும் – ஒவ்வொரு தனிமனிதரையும் மேம்படுத்தும் திட்டங்களாக இருப்பதாகவும், தனது திராவிட மாடல் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களால் பலன் அடையாதவரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, தான் செல்லும் இடங்களில் எல்லாம் தன்னைச் சந்திக்கும் மக்கள் முகங்களில் பார்க்கும் மகிழ்ச்சியில் இத்திட்டங்களின் வெற்றியைக் காண்பதாகவும் தெரிவிக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

‘நீங்கள் நலமா’ திட்டம் ஏன்?

அந்த வகையில், மகிழ்ச்சியை மேலும் உறுதிசெய்யும் விதமாகவே மாநில அரசு திட்டங்களின் பயன்கள், மக்களுக்குச் சென்று சேர்கிறதா என்பதைக் கண்காணிக்க, ‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வலைத்தளத்தையும் தொடங்கி வைத்து, ஒரு சில பயனாளிகளிடம் உரையாடி, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

இது குறித்து விவரித்துள்ள அவர், “பயனாளிகளிடம் உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தபோது உளம் மகிழ்ந்தேன். ஒவ்வொரு குடும்பத்தினரது குரலையும் கேட்டு அவர்களது குறைகளைப் போக்கும் அரசாகக் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது. அதேபோல அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரும் உங்களிடம் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்துக் கருத்துகளைப் பெற்று, அதனடிப்படையில் அரசின் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்து உங்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். கோட்டையில் உட்கார்ந்து திட்டங்கள் தீட்டி அறிவிப்பதோடு எனது கடமை முடிந்து விட்டதாக நான் எப்போதும் நினைப்பது இல்லை. ஒவ்வொரு திட்டமும் எந்த நோக்கத்துக்காக அறிவிக்கப்பட்டதோ – அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டு வருகிறதா என்பதுதான் எனக்கு முக்கியம்!

ஏனென்றால், ஒவ்வொரு திட்டமும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானவை. கடுமையான நிதி நெருக்கடிச் சூழலில் நிறைவேற்றப்படுபவை. ஆகவே, ஒதுக்கப்படும் நிதி ஒவ்வொரு குடிமகனையும் சென்று சேர வேண்டும்; நலத்திட்டம் ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் வந்து சேர வேண்டும் என்று நினைத்து திட்டங்களைத் தீட்டுபவன் நான். உங்கள் ஒவ்வொருவர் நலமே எனது நலம்! திராவிட மாடல் அரசின் நலம்! தாய்த்திருத் தமிழ்நாட்டின் நலம்! அந்த நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன் என்பதன் மற்றுமோர் அடையாளமாகத்தான் இந்த ‘நீங்கள் நலமா’ திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன்.

உங்கள் அரசு என்றும் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கும் என்று உறுதி அளிக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

microsoft teams offers more advanced features. masterchef junior premiere sneak peek. Simgecan gulet – simay yacht charters – private gulet charter turkiye.