ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பு… 10 மசோதாக்களும் சட்டமானது!

மிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான மோதல் தொடர்பான வழக்கில், ஏப்ரல் 8 அன்று உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு, ஆளுநர்களின் மறைமுக வீட்டோ அதிகாரத்தை நீக்கி, 10 மசோதாக்களையும் சட்டமாக்கி, அரசிதழில் வெளியிட வகை செய்து மாநில-மத்திய உறவுகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களை மாநில அரசு கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்கள் தான் தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதலின் மையமாக இருந்தது. ஆளுநர் ரவி, தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) உறுப்பினர்களைச் சேர்க்க வலியுறுத்தி, 2020 முதல் 2023 வரை 12 மசோதாக்களைத் தாமதப்படுத்தினார்.

2023 நவம்பரில் 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றியபோது, ஆளுநர் அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். இது அரசியலமைப்புப் பிரிவு 200-இன் கீழ் அவரது கடமையை மீறுவதாக அமைந்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வு, ஆளுநரின் தாமதம் சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்து, பிரிவு 142-ஐப் பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து சட்டமாக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பினை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சட்ட நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தத் தீர்ப்பு, ஆளுநர்கள் மசோதாக்களை முடக்குவதற்கு அதிகாரம் இல்லை என்பதை தெளிவுபடுத்தியது. மேலும், குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் மசோதாக்களைப் பரிசீலிக்க வேண்டும் என்று முதன்முறையாக காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. இது, மாநில சட்டமன்றங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முக்கியமானது, ஏனெனில் ஆளுநர்கள் மத்திய அரசின் கருவிகளாக செயல்படுவதைத் தடுக்கிறது. தமிழ்நாடு அரசு, பல்கலைக்கழக நிர்வாகத்தில் தன்னாட்சியை மீட்டெடுக்க முடிந்தது. இது கல்வித்துறையில் மாநிலக் கொள்கைகளை அமல்படுத்த உதவும்.

இருப்பினும், இந்தத் தீர்ப்பு நீதித்துறையின் அதிகார வரம்பை விரிவுபடுத்துவதாக ஒரு சாராரால் விமர்சிக்கப்படுகிறது. பிரிவு 142-ஐப் பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது, சட்டமன்ற அதிகாரத்தில் தலையீடாகக் கருதப்படலாம் என்றும், இது எதிர்காலத்தில் சர்ச்சைக்கும் வழிவகுக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

“மாநிலங்களுக்கு முன்னுரிமை உள்ள துறைகளில் ஆளுநர்களின் தலையீட்டை இந்தத் தீர்ப்பு கட்டுப்படுத்துகிறது. ஆனால், இதை அமல்படுத்துவதற்கு தெளிவான வழிமுறைகள் இல்லாதது கவலை அளிக்கிறது” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதே சமயம், இந்த தீர்ப்பை ஆதரித்துப் பேசும் சட்ட நிபுணர்களோ, “கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களும் இதேபோன்ற ஆளுநர் தாமதங்களை எதிர்கொள்கின்றன. இந்த நிலையில், இந்த தீர்ப்பு அவற்றுக்கு முன்மாதிரியாக அமையும். மத்திய அரசு ஆளுநர்களைப் பயன்படுத்தி மாநில ஆட்சிகளை பலவீனப்படுத்துவதைத் தடுக்கவும் இது உதவும். ஆயினும், ஆளுநர்கள் அரசியல் உள் நோக்கங்களுடன் செயல்படுவதை முற்றிலும் தடுக்க, அரசியல் உறுதி மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தேவை.

தமிழ்நாடு வழக்கு, நிர்வாக அதிகாரங்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களுக்கு அடிபணிய வைக்க வேண்டும் என்ற நீதித்துறையின் உறுதியை வெளிப்படுத்துகிறது. இந்தத் தீர்ப்பு, இந்திய ஜனநாயகத்தில் மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முன்னுதாரணமான தீர்ப்பு” எனக் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

hest blå tunge. jamaica population 2021 (live) full review. fethiye yacht rental : a premium choice.