தமிழக பட்ஜெட்: எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள் என்ன?

தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அன்று தொடங்கி, சில தினங்களில் முடிவடைந்தது. இந்நிலையில், அடுத்த கூட்டத்தொடர் நாளை மார்ச் 14 ஆம் தேதி தொடங்குகிறது.
காலை 9.30 மணிக்கு சட்டமன்றம் கூடியதும், 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். மறுநாள் 15 ஆம் தேதி வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் தாக்கல் செய்யவுள்ளார். வரும் 17 ஆம் தேதி பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் விவாதம் தொடங்கவுள்ளது. 4 அல்லது 5 நாட்கள் நடைபெறும் இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கருத்துக்கு நிதித்துறை அமைச்சர் பதிலளித்து பேசுவார். பின்னர், துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது.
பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு போன்ற தகவல்களை வெளியிட இருக்கிறார். அதேபோல், 2025-26 ஆம் ஆண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவர் அளிக்கவுள்ளார்.
2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு புதிய அரசு பதவியேற்ற பின்னரே 2026-2027 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
எனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அதன் தற்போதைய பதவிக்காலத்தில் தற்போது தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் தான் முழுமையான பட்ஜெட் ஆக இருக்கும். ஆதலால் இந்த பட்ஜெட்டில், 2026 தேர்தலுக்கு திமுக-வைத் தயார்படுத்தும் வகையில், மக்களைக் கவரக்கூடிய பல்வேறு அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், 2021 ஆம் ஆண்டு தேர்தலின்போது திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில், இன்னும் சில நிறைவேற்றப்படாமல் உள்ளன. எனவே, அது குறித்த அறிவிப்புகள் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக திமுக-வுக்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில், பெண்கள் ஆதரவை அதிகமாக பெற்றுக்கொடுத்ததில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்துக்கு அடுத்தபடியாக, பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அதிகரிக்கப்படுமா?

எனவே இந்த திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சிலர் இந்த திட்டத்தில் தகுதியிருந்தும் பயனாளிகளாக இருக்கவில்லை. அவர்களுக்காக விரைவில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிகபட்சம் இன்னும் மூன்று மாதங்களுக்குள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர்.
அதேபோல் இப்போது புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் 1000 ரூபாயை மேலும் அதிகரிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே தமிழக பாஜக தரப்பில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மகளிருக்கு 2,500 ரூபாய் வரை வழங்கப்படும்’ என அக்கட்சியினர் பேசி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில், மகளிருக்கு 2500 ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்து தான் அக்கட்சி ஆட்சியைப் பிடித்தது. எனவே, 2026 தேர்தல் நெருக்கத்தில் பாஜக மட்டுமல்லாது அதிமுகவும் இதேபோன்ற வாக்குறுதியை அளிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், அதனை சமாளிக்கும் வகையில், மகளிர் உரிமைத் தொகையை அதிகரிப்பது தொடர்பாகவும் அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கும் அறிவிப்புகள்
அடுத்ததாக திமுக-வின் முக்கிய வாக்கு வங்கியாக கருதப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உட்பட தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. எனவே, அவர்களை குளிர்விக்கும் விதமான சில அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.

இளைஞர்கள், தொழில் நிறுவனங்கள்
அதேபோன்று இளம் வாக்காளர்களை ஈர்க்கும் வகையிலான திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. மேலும், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான திட்டங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களை ஈர்க்கும் வகையிலான அறிவிப்புகளும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு
இந்த நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலை பொதுமக்கள் நேரடியாக தெரிந்துகொள்ளும் விதமாக சென்னையில் 100 இடங்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையம், பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, பாண்டி பஜார் சாலை மற்றும் கத்திபாரா பூங்கா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் நேரடியாக காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.