தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்… 5 லட்சம் இலக்கு!

தமிழக பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 2020 -21 ஆம் ஆண்டுகளில், கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் பள்ளிகள் இயங்காமல் இருந்தன. இதனால், பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டதோடு கற்றல் இடைவெளியும் ஏற்பட்டது. இதை சரி செய்திட தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையால் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கு நல்ல பலன் கிடைத்த நிலையில், மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேருவதை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்கள் நலனுக்காக கற்பித்தல், கற்றல் சார்ந்து எண்ணும் எழுத்தும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், ஸ்மார்ட் வகுப்பறைகள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் மாணவர்கள் யாராவது படிப்பை திடீரென நிறுத்தினாலோ அல்லது பள்ளிக்கு வராமல் இருந்தாலோ, அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் படிப்பின் அவசியத்தை எடுத்துக்கூறி, அம்மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. இடைநிற்றலும் குறைந்தது.
மாணவர் சேர்க்கை தீவிரம்
இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக, கடந்தாண்டு முன்கூட்டியே மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. அதற்கு பெற்றோர்களிடம் வரவேற்பு கிடைத்தது.

அதேபோன்று வரும் கல்வியாண்டுக்கான (2025-26) மாணவர் சேர்க்கையும் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுவிட்டது. தற்போது மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சேர்க்கை தொடங்கி இதுவரை அரசுப் பள்ளிகளில் 41,931 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதேநேரம் கடந்தாண்டு சேர்க்கை தொடங்கிய 10 நாட்களில் 80,000 மாணவர்கள் வரை சேர்க்கப்பட்டனர். ஆனால், நடப்பாண்டு சேர்க்கையை சற்று மந்தமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
5 லட்சம் இலக்கு
இதையடுத்து, மாணவர் சேர்க்கையை முன்வைத்து அரசுப் பள்ளி நலத்திட்டங்கள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு விளம்பரப் பணிகளை முன்னெடுக்க பள்ளிக் கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது. மேலும், அங்கன்வாடி மையங்களில் படித்து முடிக்கவுள்ள 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பட்டியல் சேகரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும், 5 லட்சம் சேர்க்கையை இலக்காக கொண்டு செயல்படவும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.