தொகுதி சீரமைப்பு: அனைத்து கட்சி கூட்டத் தீர்மானம்… தமிழகத்துக்கு பிரதமர் உறுதி அளிப்பாரா?

நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்தின் மேல் தொங்கும் கத்தி என்றும், இதனால் தமிழகம் நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள 39 தொகுதிகளில் 8 தொகுதிகளை இழக்க நேரிடும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்த தொகுதி சீரமைப்பு திட்டத்துக்கு ஆளும் திமுக மட்டுமல்லாது தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இருந்தார். இதில் கலந்துகொள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாமக, தேமுதிக, தவெக உட்பட 63 கட்சிகள், இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பாஜக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் (மூ), நாம் தமிழர் கட்சி, புதிய நீதிக் கட்சி, டாக்டர் எம்.ஜி.ஆர். குடியரசு கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மட்டும் பங்கேற்கவில்லை.

திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி, வில்சன், அதிமுக சார்பில் ஜெயக்குமார், இன்பதுரை, காங்கிரஸ் சார்பில் செல்வப் பெருந்தகை, ராஜேஷ்குமார், மதிமுக சார்பில் வைகோ, துரை. வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் சார்பில் பெ. சண்முகம், ஆர்.சச்சிதானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரா. முத்தரசன், பெரியசாமி, விசிக சார்பில் தொல். திருமா வளவன் எம்.பி., து. ரவிக்குமார் எம்.பி., பாமக சார்பில் அன்பு மணி ராமதாஸ், ஜி.கே. மணி, மநீம சார்பில் கமல்ஹாசன், தவாக சார்பில் தி. வேல்முருகன், தவெக சார்பில் புஸ்சி ஆனந்த், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் கொண்டுவந்த தீர்மானம்

இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறையின் பின்னுள்ள ஆபத்து மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிப்பை, பாதிப்புகளை பவர் பாய்ண்ட் மூலம் விரிவாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் ஆகியோர் எடுத்துரைத்தனர். அனைத்து கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்படுவதற்கான தீர்மானத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார்.

அந்த தீர்மானத்தில், ” இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித் துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை இந்த அனைத்து கட்சிக் கூட்டம் ஒரு மனதாகக் கடுமையாக எதிர்க்கிறது. நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப் பாக செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது நியாயமற்றது.

‘பிரதமர் உறுதி அளிக்க வேண்டும்’

மக்கள்தொகை கட்டுப் பாட்டை அனைத்து மாநிலங்களும் ஊக்குவிக்கும் வகையில் 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்ற தொகுதி வரையறை செய்யப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டின் அன்றைய பிரதமர் உறுதி யளித்தவாறு, தற்போதும் இந்த வரை யறை 2026-லிருந்து அடுத்த 30 ஆண்டு கள் நீட்டிக்கப்படும் என நாடாளு மன்றத்தில் பிரதமர் உறுதி அளிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில் 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை – மாநிலங்களவை) மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதி எண்ணிக்கைகள் உள்ளதோ, அதே விகிதத்தில் தென் மாநிலங்களின் தொகுதிகளை உயர்த்த அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற் போதைய பிரதிநிதித்துவ சதவிகிதம் 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தென்மாநிலங்களைத் தண்டிப்பதா?

மேலும், தொகுதி மறுசீரமைப்புக் குத் தமிழ்நாடு எதிரானதாக இல்லை. அதே சமயத்தில் கடந்த 50 ஆண்டு களாக சமூக- பொருளாதார நலத்திட்டங் களைச் சிறப்பாக செயல்படுத்தி யதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கைகளாக அனைத்துக் கட்சி கூட்டம் முன் வைக்கிறது. கோரிக்கை களையும், அவை சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி களின் பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

இந்த தீர்மானம் மீது அனைத்துக் கட்சித் தலைவர்கள் தங்களின் கருத்தை தெரிவித்தனர்.அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர்கள் அனை வரும், நாடாளுமன்றத் தொகுதிக் குறைப்புக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு துணையிருப்போம் என்றும் கூறியதுடன், தமிழக அரசின் தீர்மானத்தை வர வேற்று ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

current events in israel. golden globe fans rage 'the industry is over' after emilia pérez wins big daily express us chase360. A shepherd’s last journey : the world bids farewell to pope francis.